தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல் ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு


தொடரும் இலங்கை கடற்படை தாக்குதல் ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 21 March 2017 5:23 AM GMT (Updated: 21 March 2017 5:22 AM GMT)

இலங்கை கடற்படை ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் சிறைபிடித்து உள்ளது.


ராமேசுவரம்,

இந்திய-இலங்கை எல்லை கடற்பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த 6-ந்தேதி உச்சக் கட்டமாக தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற் படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.
இதனை தொடர்ந்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து இனி தாக்குதல் நடக்காது. உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம். போராட்டத்தை கைவிடுங்கள் என கூறினர்.இதனை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு  பிரிட்ஜோ உடலை பெற்று இறுதி சடங்கு நடத்தினர்.

இந்த சூழலில்  இலங்கை கடற் படையினர்  மீண்டும் தங்களது தாக்குதலை தொடங்கினர்.  கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியை சந்திக்க மீனவர் குழு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றது. இதனால் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று மீனவர்கள் நம்பி இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் சிறை பிடிப்பை தொடங்கி உள்ளனர்.

நேற்று ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடம் மீனவர்கள் 300 பேர் மீன்பிடிக்க சென்றனர். சிலர் இரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங் களது தாக்குதலை தொடர்ந்த தோடு, 10 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். இன்று காலை மற்ற மீனவர்கள் கரை திரும்பியதும் சிறை பிடிப்பு பற்றிய தகவல் வெளியானது.

இதுபற்றி மீனவர்கள் கூறும்போது, தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜஸ்டீன் என்பவரது விசைப்படகு திடீரென கச்சத்தீவு அருகே பழுதானது. அதனை பழுது பார்க்கும் பணியில் 10 மீனவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகை சுற்றிவளைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் படகையும், அதில் இருந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். அவர்களை காங்கேயம் துறைமுகம் கொண்டு சென்றதாக தெரிகிறது.

Next Story