தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி - துரைமுருகன்


தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி -  துரைமுருகன்
x
தினத்தந்தி 24 March 2017 5:01 AM GMT (Updated: 24 March 2017 5:01 AM GMT)

தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி என தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறினார்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.
ஜெயலலிதா இதற்கு முன்பு பர்கூரிலும், ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார். அவர் முதல்-அமைச்சரான பிறகும் அந்த தொகுதிகள் முன்னேற்றம் அடைய வில்லை.

ஜெயலலிதா இறந்த 3 மாதத்தில் அ.தி.மு.க. 3 ஆக உடைந்து விட்டது. மேலும் கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கட்சி பெயரையும் தேர்தல் கமிஷன் முடக்கி விட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் 3 பிரிவாக ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மக்களுக்காக என்ன செய்துவிட போகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் வீண் பழிதான் சுமத்துகின்றனர். மக்களை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை.

தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் முதல்-அமைச்சர் ஆவது உறுதி.அதற்கு அச்சாரம்தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்.

இதில் வெற்றி பெறுவதின் மூலம் தி.மு.க. நிலை உயரும். கொள்கை அடிப்படையில் செயல்படும் கட்சி தி.மு.க.வாகும். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் பிரச்சினை களுக்காக நாள்தோறும் போராடுவதால் அதற்கு தீர்வு கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story