18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்; தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு


18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்; தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
x
தினத்தந்தி 26 April 2017 10:46 PM GMT (Updated: 26 April 2017 10:45 PM GMT)

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள்.

4 சதவீதம் அகவிலைப்படி

இதுதொடர்பாக தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மக்களுக்காகவே திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் ஜெயலலிதா. மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா வகுத்த பாதையில் செயல்படும் நான், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 1.1.2017 முதல் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். 1.1.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 1.1.2017 முதல் அகவிலைப்படியினை 4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1.1.2017 முதல் 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

யாருக்கு பொருந்தும்?

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3,080 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ.1,540 வரையில் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

கூடுதல் செலவு

இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜனவரி மாதம் 2017 முதல் ஏப்ரல் மாதம் 2017 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், மே மாதம் 2017 முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ரூ.986.77 கோடியாக இருக்கும்.  இவ்வாறு அதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


Next Story