அதிமுகவில் திடீர் பரபரப்பு.. 28 எம்.எல்.ஏ.க்கள் ‘திடீர்’ ரகசிய ஆலோசனை


அதிமுகவில் திடீர் பரபரப்பு.. 28 எம்.எல்.ஏ.க்கள் ‘திடீர்’ ரகசிய ஆலோசனை
x
தினத்தந்தி 27 April 2017 5:25 AM GMT (Updated: 27 April 2017 5:24 AM GMT)

அதிமுக-வைச்சேர்ந்த 28 எம்.எல்.ஏக்கள் திடீரென புதிய கோஷ்டியாக உருவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க.வில் எஸ்.சி., எஸ்.டி ஆகிய தாழ்த்தப் பட்ட இனத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் உள்ளனர். இவர்களில் சோழவந்தான் மாணிக்கம், வாசுதேவநல்லூர் மனோகரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியில் உள்ளனர். மற்ற 30 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடியின் அ.தி.மு.க. அம்மா அணியில் உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ஆட்சி மற்றும் கட்சிப் பணிகளில் உரிய அங்கீகாரம் தரப்படவில்லை என்று ஆதங்கம் உருவாகியுள்ளது. எனவே அமைச்சரவை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் உரிய பிரதிநிதித்துவம் பெற தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விரும்பு கிறார்கள்.

இதற்காக அ.தி.மு.க.வில் உள்ள எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்துள்ளனர். அவர்களை பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. இரா.தமிழ் செல்வன் ஒருங்கிணைத்துள்ளார்.
அவர் தலைமையில் தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க் கள் அனைவரும் சென்னையில் உள்ள ஒட்டல் ஒன்றில் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் 28 எஸ்.சி., எஸ்.டி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஆனால் 10 எம்.எல்.ஏ.க்கள் தான் கலந்து கொண்டனர் என்று ஒருவர் தெரிவித்தார். இந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஒன்றாக இணையும் போது, அமைச்சரவை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில் இடம் பெற முக்கிய இனத்தை சேர்ந்தவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபற்றி கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 4-ல் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார். ஆனால் அதற்கு ஏற்ப தமிழக அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் இல்லை. 33 எஸ்.சி., எஸ்.டி. எம்.எல்.ஏ.க்களில் பெஞ்சமின், சரோஜா, ராஜலட்சுமி ஆகிய 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். தனபால் சபாநாயகராக உள்ளார்.
எனவே அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்டுப் பெறுவது பற்றி ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது. மேலும் முக்கிய இலாகாகளையும் கேட்டுப் பெற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதுபற்றி இரா.தமிழ் செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், ‘‘அமைச்சரவையில் முக்கிய பதவிகளுக்கு எங்களைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. எனவே இந்த தடவை முக்கிய இலாகாகள் கேட்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

அ.தி.மு.க. அணிகள் விரைவில் ஒன்றாக இணையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் அ.தி.மு.க. வில் நெருக்கடியை ஏற் படுத்தி உள்ளது.


Next Story