அணிகள் இணைப்பு குறித்து குழுவின் தலைவர் மட்டுமே பத்திரிகையாளர்களுடன் பேசுவார்-செங்கோட்டையன்


அணிகள் இணைப்பு குறித்து குழுவின் தலைவர் மட்டுமே பத்திரிகையாளர்களுடன் பேசுவார்-செங்கோட்டையன்
x
தினத்தந்தி 27 April 2017 8:50 AM GMT (Updated: 27 April 2017 8:49 AM GMT)

அணிகள் இணைப்பு குறித்து குழுவின் தலைவர் மட்டுமே பத்திரிகையாளர்களுடன் பேசுவார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

சென்னை,

சர்.பிட்டி தியாகராயர் 166-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், வேலுமணி, பா.பென்ஜமின்,  கடம்பூர் ராஜூ, மற்றும் எஸ்.ஆர். விஜயகுமார் எம்.பி. வடசென்னை தெற்கு மாவட்டசெயலாளர் நா.பாலகங்கா, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரு அணிகள் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் மாறி மாறி கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதனால் பல்வேறு  குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் எங்கள் அணியின் குழு தலைவர் வைத்திலிங்கம் மட்டுமே  இனி பேச்சு வார்த்தை நடத்துவார்.கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து காவல் துறை நடவடிக்கையை முடுக்கியுள்ளது.

விசாரணை முடிவில் உண்மையான குற்றவாளி யார் என்பது தெரிய வரும். சட்டசபையை கூட்டுவது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். இரு அணிகளும் இணைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதால் அரசு பணிகள் முடங்குவதாக கூறுவது தவறு. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் சிவி சண்முகம் கூறியதாவது:-

இருஅணிகள் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வெளியான தகவல் தவறு. கொடநாடு காவலாளி கொலை தொடர்பாக, சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்த பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்  ஜெயக்குமார் கூறியதாவது:-

பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். இருஅணிகள் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story