தமிழகத்தில் பாகுபலி-2 திரைப்படம் திரையரங்குகளில் தமிழில் வெளியாகிறது


தமிழகத்தில் பாகுபலி-2 திரைப்படம் திரையரங்குகளில் தமிழில் வெளியாகிறது
x
தினத்தந்தி 28 April 2017 4:01 AM GMT (Updated: 28 April 2017 4:01 AM GMT)

பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னை தீர்ந்ததும் தமிழகத்தில் பாகுபலி 2 திரைப்படம் திரையரங்குகளில் தமிழில் வெளியாகிறது.


சென்னை,

தமிழில் வெளியாவதில் சிக்கல்

தமிழகத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. 
தமிழில் பாகுபலி-2 திரைப்படம் 650 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பாகுபலி 2 திரைப்பட வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது, அந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டு இன்று படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தமிழில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னையால் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி- 2 திரைப்படம் திரையிடப்பட்டது.

இணையத்தில் வெளியானது
 
இப்பிரச்சனை ஒருபக்கம் நீடிக்க மறுபக்கம் பாகுபலி-2 திரைப்படம் தமிழில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்து ரூ.350 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்ட பாகுபலி–2 படம் உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இன்று திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் நேற்றே இணையதளங்களில் வெளியாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது இணையத்தில் சட்டவிரோதமாக முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணையதளத்தில் பாகுபலி - 2 திரைப்படம் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திரையரங்குகளில் வெளியாகிறது

திரைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்பட்டதற்கு இடையே, தமிழில் வெளியிடுவதில் பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையே ஏற்பட்டு இருந்த பிரச்னை முடிவுக்கு வந்து உள்ளது. இருதரப்பு இடையேயும் சமரசம் ஏற்பட்டதை அடுத்து பாகுபலி- 2 திரைப்படம் தமிழில் திரையரங்குகளில் வெளியாகிறது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர் இடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து தமிழகத்தில் 650 திரையரங்குகளில் பாகுபலி-2 தமிழ் மொழியில் வெளியானது.


Next Story