சென்னையில் 3–ந் தேதி நடைபெறுகிறது: கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு


சென்னையில் 3–ந் தேதி நடைபெறுகிறது:  கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா; முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 May 2017 10:45 PM GMT (Updated: 27 May 2017 7:14 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவும், 94–வது பிறந்த நாள் விழாவும் சென்னையில் 3–ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை,

ராகுல்காந்தி, நிதிஷ்குமார் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

கருணாநிதி வைர விழா

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் ஜூன் மாதம் 3–ந் தேதி (சனிக்கிழமை) வருகிறது. எனவே, பிறந்த நாள் விழாவோடு, அவரது சட்டப்பேரவை வைர விழாவையும் சேர்த்து சிறப்பாக கொண்டாட தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜூன் 3–ந் தேதி மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்கிறார்.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

சிறப்பு விருந்தினர்களாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்–மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்–மந்திரி வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

நிறைவாக, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரை ஆற்றுகிறார்.

கருணாநிதி பங்கேற்பாரா?

பொதுவாக, இதுபோன்ற விழாக்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று ஏற்புரை வழங்குவார். ஆனால், தற்போது உடல் நலிவுற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால், தனது சட்டப்பேரவை வைர விழாவிலும், 94–வது பிறந்தநாள் விழாவிலும் அவர் கலந்து கொள்ளமாட்டார் என தெரிகிறது.


Next Story