83 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி; முதல்–அமைச்சர் தொடங்கிவைத்தார்


83 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி; முதல்–அமைச்சர் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 28 May 2017 9:06 PM GMT (Updated: 28 May 2017 9:06 PM GMT)

83 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

குடிமராமத்து

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, நீர்நிலைகளை தூர்வாரி, அதன் கொள்ளளவை அதிகப்படுத்தி, வருங்காலத்தில் விவசாயப் பணிகளை மேம்படுத்திட, பயனீட்டாளர்களின் உதவியுடன் ‘பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு’ புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, ரூ.100 கோடி செலவில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகளை செயல்படுத்திடும் விதமாக, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மார்ச் மாதம் 13–ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகள் தொடங்கிவைத்தார்.

தற்போது, ஒரு மக்கள் இயக்கமாக மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2017–18–ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு 2,065 பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

வண்டல்மண்

பெருகிவரும் நீர்த்தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்கவேண்டியது அவசியமாகிறது. அதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளான அணைகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல்மண்ணை அகற்றி நீர் கொள்ளளவை மீளப் பெறும் சீரிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி, கால்வாய் மற்றும் நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளிலிருந்து தூர்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண் மற்றும் களிமண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டணமின்றி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று எடுத்துச் செல்லலாம் என்று கடந்த ஏப்ரல் 27–ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

விவசாயிகளுக்கு அனுமதி

அதன்படி, விவசாயிகள் நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர்நிலைகளிலிருந்து வண்டல்மண் எடுத்துச் செல்ல விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்காக கூடுதலாக 60 கனமீட்டருக்கு மிகாமல் களிமண்ணையும், பொதுமக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக 30 கனமீட்டருக்கு மிகாமல் வண்டல் மண், சவுடுமண், சரளைமண் (கிராவல்) ஆகியவற்றை கட்டணமில்லாமல் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாநிலத்திலுள்ள மொத்தம் 42 ஆயிரத்து 115 நீர்நிலைகளில் 36 ஆயிரத்து 345 நீர்நிலைகளிலிருந்து வண்டல்மண்ணை எடுத்துச் செல்ல மாவட்ட கலெக்டர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 986 நீர்நிலைகளிலிருந்து 44 லட்சத்து 10 ஆயிரத்து 472 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 86 ஆயிரத்து 355 விவசாயிகள் உள்ளிட்ட பயனீட்டாளர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை காவிரி ஆற்றின் குறுக்கே 1925–ம் ஆண்டு தொடங்கி 1934–ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை ஒருமுறை கூட மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வளம் அதிகரிக்கும்

தற்போது மாநிலமெங்கும் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்நிலைகளைத் தூர்வாருதல் திட்டத்தின்படி மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை செயல்படுத்தும் விதமாக, மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் வலதுகரைப் பகுதியில் அமைந்துள்ள மூலக்காடு, கொளத்தூர் மற்றும் பண்ணவாடி கிராமங்களிலும், மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் இடதுகரைப் பகுதியில் அமைந்துள்ள கூணான்டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் தூர்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண்ணில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக வரலாற்றில் முதல்முறையாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியினை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். இதன்மூலம் மேட்டூர் அணையின் கொள்ளளவு அதிகரிப்பதுடன், விவசாயத்திற்கு தேவையான நீர்வளமும் அதிகரிக்கும்.

அதிகாரிகள்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், வி.சரோஜா, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், சேலம் மாவட்ட கலெக்டர் வி.சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story