எப்போது வேண்டுமானாலும் வரலாம் ஓ.பன்னீர்செல்வத்துக்காக கதவு திறந்தே இருக்கிறது


எப்போது வேண்டுமானாலும் வரலாம் ஓ.பன்னீர்செல்வத்துக்காக கதவு திறந்தே இருக்கிறது
x
தினத்தந்தி 18 Jun 2017 11:15 PM GMT (Updated: 18 Jun 2017 9:45 PM GMT)

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கதவுகள் திறந்தே இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். கதவுகள் திறந்தே இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்து உருவாக்கப்பட்டு உள்ள சரக்கு மற்றும் சேவை வரி குழு (ஜி.எஸ்.டி.குழு) வின் 17–வது கூட்டம், மத்திய நிதித்துறை மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் புதுடெல்லியில் விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், கலந்து கொண்டு பேசினார். அவருடன் அரசு வணிக வரித்துறை இணை ஆணையாளர் வி.பாலாஜி கலந்து கொண்டார்.

கூட்டம் முடிவடைந்ததும் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:–

இன்றைய கூட்டத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான விதிமுறைகள் வகுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. சில மாநிலங்கள் சில குறிப்பிட்ட பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தபிறகு கூட சில பொருட்கள் மீதான வரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கவுன்சில் முன்பு பரிசீலனைக்கு வைக்கலாம். இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும். இதன் அடிப்படையில் சில பொருட்களின் மீது வரிகளை குறைக்க கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.

வறுத்த பருப்பு வகைகள் மீது 5 சதவீதம் உள்ளது. அதற்கு விலக்கு அளிக்க கோரி இருக்கிறோம். கண் கண்ணாடிக்கு 18 சதவீதம் உள்ளது. இதனை 15 சதவீதமாக குறைக்க கோரி உள்ளோம். 500 சி.சி.க்கு மேல் உள்ள வாகனங்களுக்கு வரிவிலக்கு கோரி இருக்கிறோம். ‘ஏர் கம்ப்ரெஸ்ஸர்’, ‘வெட்கிரைண்டர்’ ஆகியவற்றின் மீது 10 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

‘ஏர் கண்டி‌ஷன்’ செய்யப்படாத ஓட்டல்களுக்கு 12 சதவீதம் வரி இருந்தது. அதனை 5 சதவீதமாக குறைக்க கோரி இருக்கிறோம். கைவினை வெள்ளி கொலுசுகளுக்கு வரி குறைக்க வேண்டும். பட்டாசு, உரம், சாயப்பொருட்கள் ஆகியவற்றுக்கு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி உள்ளோம்.

தமிழகம் சார்பில் மொத்தம் 30 பொருட்களுக்கு வரியை குறைக்க கோரிக்கை வைத்து உள்ளோம். சில பொருட்களுக்கு முழுமையாக வரி விலக்கும், ‘சானிட்டரி நாப்கின்கள்’ மீது மொத்தமாக வரி கூடாது என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து இருக்கிறோம். ஜூலை 1–ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஜி.எஸ்.டி.வரி அமலுக்கு வரும்.

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சினை குறித்து வழக்குப்பதிவு செய்து உள்ளது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கோரிக்கை வைத்து உள்ளார். இது ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் தீர்மானிக்க முடியாது.

முதல்–அமைச்சர் ஆக வேண்டும் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 123 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இல்லை. கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவில் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. இது மக்கள் பாராட்டுகின்ற அரசாக இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து கட்சியின் நிலைப்பாட்டை மூத்த தலைவர்கள் எடுப்பார்கள். உரியநேரம் வரும்போது கண்டிப்பாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:–

ஜெயலலிதாவின் அரசை கலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எப்போது வேண்டுமானலும் வரலாம். கதவுகள் திறந்தே இருக்கிறது. இந்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story