பள்ளிக்கூடங்களில் கடந்த ஆண்டு ‘லேப்–டாப்’ வழங்காததால் ஏழை மாணவர்கள் பாதிப்பு


பள்ளிக்கூடங்களில் கடந்த ஆண்டு ‘லேப்–டாப்’ வழங்காததால் ஏழை மாணவர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2017 10:15 PM GMT (Updated: 22 Jun 2017 4:27 PM GMT)

பள்ளிக்கூடங்களில் கடந்த ஆண்டு பிளஸ்–2 படித்த மாணவ–மாணவிகளுக்கு ‘லேப்–டாப்’ வழங்கவில்லை. இதனால் ஏழை மாணவர்கள் கல்லூரிக்கு சென்றதும் பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, காலணி உள்பட 14 வகையான பொருட்களை விலை இன்றி அரசு வழங்கி வருகிறது.

14 வகை பொருட்களில் லேப்–டாப்பும் ஒன்றாகும். தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு லேப்–டாப் வழங்கப்படுகிறது. வருடந்தோறும் பிளஸ்–2 மாணவர்களுக்கு லேப்–டாப் வழங்கப்படுவதுடன் பிளஸ்–2 சான்றிதழில் லேப்–டாப் வழங்கப்பட்டதாக தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு வந்தனர்.

கடந்த 2015–2016–ம் ஆண்டு பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கு லேப்–டாப் அவர்கள் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பே வழங்கப்பட்டது.  ஆனால் 2016–2017–ம் ஆண்டு பிளஸ்–2 படித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ–மாணவிகளுக்கு லேப்–டாப் வழங்கப்படவில்லை. இதனால் அந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் ‘கடந்த ஆண்டு பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கு லேப்–டாப் வழங்கப்படவில்லை. இது குறித்து முதன்மை கல்வி அதிகாரியிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை’ என்றனர்.

மாணவர்கள் சிலர் கூறியதாவது:–

நாங்கள் பிளஸ்–2 முடித்து தேர்வு முடிவு வந்து கல்லூரிகளில் சேர்ந்து விட்டோம். எங்களில் சிலர் கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் சேர்ந்து விட்டோம், பிளஸ்–2 முடித்த பல மாணவர்கள் என்ஜினீயரிங் படிக்கவும்,. சிலர் கால்நடை மருத்துவ படிப்புக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

கலை அறிவியல் கல்லூரிகள் திறந்து விட்டன. எனவே இன்னும் லேப்–டாப் வழங்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்டுள்ளோம். தினமும் லேப்–டாப் தேவைப்படுகிறது லேப்–டாப் இல்லாமல் திண்டாடுகிறோம். ஏழை மாணவர்களுக்கு சொந்தமாக லேப்–டாப் வாங்குவது சிரமம். எனவே உடனடியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகளுக்கு லேப்–டாப் வழங்க வேண்டும். இப்போது பிளஸ்–2 படிக்கிற மாணவர்களுக்கு அரையாண்டுக்குள் வழங்கவேண்டும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ரெ.இளங்கோவனிடம் கேட்டதற்கு லேப்–டாப் வழங்குவது எல்.காட். நிறுவனம். எனவே லேப்–டாப் வழங்குவது எந்த நிலையில் உள்ளது என்று தெரியாது. எல்காட் நிறுவனம் லேப்–டாப் தந்தால் அவற்றை முதன்மை கல்வி அதிகாரி மூலம் பள்ளிகளுக்கு கொடுப்போம். மாணவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்றார்.


Next Story