ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மீராகுமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மீராகுமாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 22 Jun 2017 10:15 PM GMT (Updated: 22 Jun 2017 5:51 PM GMT)

எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் மீராகுமார் வெற்றி பெற தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– எதிர்க்கட்சிகளின் சார்பில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக மீராகுமார் அறிவிக்கப்பட்டு இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:– அந்தக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., கலந்துகொண்டார். ஜனாதிபதிக்கான வேட்பாளர் குறித்து தி.மு.க. எந்த உணர்வுடன் இருந்ததோ, அதேபோன்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் வெற்றிபெற வேண்டும் என தி.மு.க. சார்பில் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கேள்வி:– பா.ஜ.க. சார்பில் ஒரு தலித் வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கிறாரே?

பதில்:– எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி, அதன் பிறகு தான் ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் முடிவு செய்வோம் என்று பா.ஜ.க. வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதனை செயல் வடிவத்துக்குக் கொண்டு வரவில்லை. ஒப்புக்காக ஒரு நாடகத்தை நடத்தினார்களே தவிர, இவர் தான் வேட்பாளர் என்று வெளிப்படையாக எங்களிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அதனால் தான் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

கேள்வி:– தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்ற, நிதிஷ்குமார், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அப்படி நடக்கவில்லையே?

பதில்:– கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நடந்த விழாவல்ல. அது கருணாநிதிக்காக மட்டுமே நடைபெற்ற விழா. அதனால் தான் அவர் விழாவில் பங்கேற்றபோதும் கருணாநிதியை பற்றி மட்டும் பேசிவிட்டு சென்றார்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story