எம்.ஜி.ஆர். பெயருக்கு களங்கம் விளைவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்


எம்.ஜி.ஆர். பெயருக்கு களங்கம் விளைவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2017 10:15 PM GMT (Updated: 22 Jun 2017 7:02 PM GMT)

எம்.ஜி.ஆர். பெயருக்கு களங்கம் விளைவித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பி.எச்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30–ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் தொடக்க விழா 30–ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், விழாவுக்கு மற்ற மாநில முதல்வர்களை அழைப்பீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘வெளிமாநில முதல்வர்கள் யாருக்கு, எம்.ஜி.ஆரை தெரியும்’’ என்று பதில் அளித்தார்.

இந்த நிலையில் சென்னையில் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியானது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆரை. இந்திய அளவில் யாருக்கும் தெரியாது என கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் தெரிந்த, ‘பாரத ரத்னா’ பட்டம் பெற்ற எம்.ஜி.ஆரை யாருக்கும் தெரியாது என்று கூறியிருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்களும் கொதித்துப்போய் இருக்கிறோம். அ.தி.மு.க.வை நிறுவியவரே எம்.ஜி.ஆர். தான். இன்று 37 எம்.பி.க்களை பெற்று அகில இந்திய அளவில் 3–வது பெரிய கட்சியாக இருப்பதற்கு காரணம் அவர் தான்.

அவரது சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திண்டுக்கல் சீனிவாசன் சட்டமன்றத்துக்கு உள்ளே செல்ல தகுதியற்றவர். எனவே எம்.ஜி.ஆரின் பெயருக்கு களங்கம் விளைவித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்குள் செல்ல முடியாமல் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஏழை, எளிய மக்கள் உள்ளே செல்ல முடியவில்லை. உடனடியாக அந்த இரும்பு தடுப்புகளை அகற்ற முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story