அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 24 Jun 2017 7:15 AM GMT (Updated: 24 Jun 2017 7:36 AM GMT)

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் பேகம்பூர் பங்களா மேட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் என்ற இக்பால். இவர் 38-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். தற்போது 38-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.

இவரது வீட்டில் இன்று அதிகாலை 2.15 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் ஒரு பொருள் விழுந்தது. இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து எழுந்து பார்த்தபோது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் திரியுடன் பற்ற வைக்கப்பட்டு சிலர் இக்பால் வீட்டின் மீது வீசிச் சென்றது தெரிய வந்தது.

ஆனால் திரி எரியாததால் பயங்கர சத்தம் மட்டும் கேட்டு தீ பிடிக்காமல் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இச்சம்பவம் திண்டுக்கல் நகரில் காட்டுத் தீ போல் பரவியதால் ஏராளமானோர் குவிந்தனர். 

போலீஸ் குவிப்பு

சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். அந்த பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு ஆதரவாக இரு அணிகளும் செயல்பட்டதாலேயே பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் முன்பு வைக்கப்பட்ட அ.தி.மு.க. அணிகளின் பேனர்கள் கிழிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

திண்டுக்கல் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் ஒவ்வொரு வருடமும் ஜமாத்தார்கள் சார்பில் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைத்து இப்தார்நோன்பு வழங்கப்படும். இதில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த வருடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது.

Next Story