கட்டிடங்கள், மனை விற்பனையில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை


கட்டிடங்கள், மனை விற்பனையில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 24 Jun 2017 10:15 PM GMT (Updated: 24 Jun 2017 8:25 PM GMT)

கட்டிடங்கள், மனை விற்பனையில் விதிகளை மீறினால் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசால் இயற்றப்பட்ட கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) சட்டம், 2016-க்கு இணங்க தமிழக அரசு இதற்கான “தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள், 2017” என்ற விதிமுறைகளை உருவாக்கி 22-ந்தேதியன்று அறிவிக்கை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, செயலாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் செயலாளர், சட்டத்துறை ஆகியோர் அடங்கிய தெரிவுக்குழு, ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் குழுமம், தீர்ப்பாயத்தின் இரண்டு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க உரிய பரிந்துரைகளை வழங்கும்.அதுவரை இடைக்கால ஏற்பாடாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் செயலாளர் குழுமமாக செயல்படுவார். தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள், 2017-ன் முக்கிய கூறுகள் பின்வருமாறு:-

500 சதுரமீட்டர் நிலப்பரப்பளவு அல்லது எட்டு அலகுகளுக்கு மேல் உள்ள அனைத்து கட்டிட மனை விற்பனையில் ஈடுபடும் முகவர்கள் மற்றும் அத்தகைய திட்டங்கள் குழுமத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒதுக்கீட்டாளரிடமிருந்து திட்டத்திற்காக வசூலித்த 70 சதவீத தொகையை திட்டத்திற்காக தனிக் கணக்கு தொடங்கி வைப்பீடு செய்து அக்குறிப்பிட்ட திட்டம் மற்றும் கட்டிட செலவுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்.ஒவ்வொரு மேம்பாட்டாளர் தனது திட்டத்திற்கு உண்டான நிலம் எவ்வித வில்லங்கமும் இல்லை என்பதற்கும் அந்நிலத்திற்குண்டான சட்டபூர்வமாக உரிமை பெற்றவர் என உறுதிமொழி பத்திரம் அளிப்பதுடன் அத்திட்டம் நிறைவு பெறும் காலத்தையும் குறிப்பிட்டு பிரமாண பத்திரத்தில் சான்றளிக்க வேண்டும்.

இச்சட்டத்தின் கீழ் பல்வேறு அபராதங்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. திட்டமதிப்பீட்டில் 10 சதவீதம் அபராதங்கள் அல்லது மூன்றாண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ இச்சட்டத்தின் கீழ் விதிக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story