சாகசத்தின் போது விபத்து: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் படுகாயம்


சாகசத்தின் போது விபத்து: மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Jun 2017 11:15 PM GMT (Updated: 25 Jun 2017 9:05 PM GMT)

மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட போது 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருவல்லிக்கேணி சிவராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஆதிகேசவன் (வயது 21). இவர் நேற்று அதிகாலை விவேகானந்தர் இல்லம் அருகே செல்லும் போது சாலையின் ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒரு கார் திடீரென வலது பக்கம் திரும்பியது.  இதை சற்றும் எதிர்பாராத ஆதிகேசவன் பதற்றத்தில் தனது மோட்டார் சைக்கிளையும் வலது பக்கமாக திருப்பி எதிர்சாலையில் செல்ல முயற்சித்தார். அப்போது எதிர் சாலையில் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ஆதிகேசவன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.  இதில் ஆதிகேசவன் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றி ஆதிகேசவன் மீது பிடித்தது.

இந்த விபத்தில் ஆதிகேசவனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. மேலும் எதிர் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 சிறுவர்களையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும், தீக்காயம் ஏற்பட்ட ஆதிகேசவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  படுகாயம் அடைந்த 3 பேரும் நேற்று அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

சென்னை மெரினா காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாலும், பந்தயத்தில் ஈடுபடுவதாலும் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதும் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் சாகசத்தில் ஈடுபடுவது என்பது தொடர் கதையாகி உள்ளது.


Next Story