மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்


மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்
x
தினத்தந்தி 28 Jun 2017 10:30 PM GMT (Updated: 28 Jun 2017 9:07 PM GMT)

மருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

சென்னை,

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டன.

2-வது நாளாக நேற்றும் விண்ணப்ப வினியோகம் நடந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதை பதிவிறக்கம் செய்து அனுப்பும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.

இந்த ஆண்டு அந்த நடைமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேரடியாக விண்ணப்பங்களை வந்து வாங்குவதற்காக மாணவர்கள் கூட்டம் அலைமோதியது. இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆன்-லைன் விண்ணப்ப முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் www.tnh-e-a-lth.org என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதன்பின்னர் அதை பதிவிறக்கம் செய்து அனுப்பலாம். மருத்துவ படிப்புக்கு முதல் நாளில் 8 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று அரசு கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 597 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயிரத்து 405 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 2 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜ் தெரிவித்தார்.

வருகிற 7-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

Next Story