“பூஜை செய்வதாக கூறி மனைவியை பலாத்காரம் செய்ததால் கொன்றேன்”தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்


“பூஜை செய்வதாக கூறி மனைவியை பலாத்காரம் செய்ததால் கொன்றேன்”தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 28 Jun 2017 11:15 PM GMT (Updated: 28 Jun 2017 9:35 PM GMT)

கேரள ஜோதிடர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான பேக்கரி தொழிலாளி, ‘பூஜை செய்வதாக கூறி மனைவியை பலாத்காரம் செய்ததால் கொலை செய்தேன்’ என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள ஏரியில் கடந்த 26-ந் தேதி பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் மாந்திரீக பொருட்கள் கிடந்தது. இதுபற்றி காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஜோதிடராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கொலையானவர் கேரளாவை சேர்ந்த ஜோதிடர் நந்தகுமார் (வயது 43) என்பதும், அவர் மாந்திரீக தொழில் செய்துவந்ததும் தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக வாழப்பாடி பகுதியை சேர்ந்த கோவிந்தன் (39) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இவர் ஒரு பேக்கரியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். 19 வயதான மூத்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை கோவிந்தனும், அவரது மனைவியும் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் அவர் சரியாக குணமடையவில்லை. இதனால் மாந்திரீகம் செய்தால் குணமாகிவிடும் என்று சிலர் கோவிந்தனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து 7 நாட்களுக்கு முன்பு கேரளா ஜோதிடர் நந்தகுமார் வரவழைக்கப்பட்டு வீட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

25-ந் தேதி இரவு கோவிந்தனின் மனைவிக்கு தனி பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி ஒரு அறைக்குள் ஜோதிடர் நந்தகுமார் அழைத்துச் சென்று அவருக்கு வசிய மை தடவி பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்து ஆத்திரம் அடைந்த கோவிந்தன், இரும்பு கம்பியால் ஜோதிடர் நந்தகுமாரை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவரை கோவிந்தன் மோட்டார் சைக்கிளில் ஏரிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தனை போலீசார் கைது செய்தனர்.

கோவிந்தன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

எனது மூத்த மகனுக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால், கேரள ஜோதிடர் நந்தகுமார் பற்றி கேள்விப்பட்டு அவரை அணுகினேன். அவர் மாந்திரீகம் செய்ய ரூ.5 ஆயிரம் கேட்டதால், நானும் ஒப்புக்கொண்டு வீட்டிற்கு அழைத்துவந்தேன்.

ஜோதிடர் நந்தகுமார் வீட்டில் இருந்த 6 நாட்களும் நாட்டுக்கோழி, முட்டை என சமைத்து விருந்து வைத்தேன். என் குழந்தைகளுக்கு கூட இதுவரை நாட்டுக்கோழி சமைத்து கொடுத்ததில்லை. அந்த ஜோதிடர், எங்கள் குடும்பத்தினருக்கு யாரோ சூனியம் வைத்துள்ளதாகவும், அதை எப்படியாவது எடுத்துவிடுகிறேன் எனவும் கூறி சிறப்பு பூஜைகளை செய்தார்.

இதையெல்லாம் நாங்கள் நம்பினோம். கடைசி நாள், வீட்டில் உள்ள அனைவருக்கும் தனித்தனியாக பூஜை செய்ய வேண்டும் என்றார். மது வாங்கி குடித்தார். அதன்பிறகு பூஜைக்கு முதலில் என் மனைவி சென்றார். பூஜையில் இருந்து வந்த என் மனைவி, ஜோதிடர் நந்தகுமார் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதுகுறித்து ஜோதிடரிடம் கேட்டபோது, அப்படி தான் செய்வேன். உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன் குடும்பத்தையே சூனியம் வைத்து ஒழித்துவிடுவேன் என்றார். இதனால் கோபம் அடைந்த நான், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ஜோதிடரை அடித்தேன். ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த அவரை போர்வையால் மூடி, எனது மோட்டார் சைக்கிளில் ஏரி பகுதிக்கு கொண்டு சென்றேன். மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜோதிடரின் உடலில் ஊற்றி தீ வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்று கூறினார்.

Next Story