சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடங்கியது
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு பொதுகலந்தாய்வு நேற்று தொடங்கியது. 20 நாட்கள் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை,
இந்த கலந்தாய்வை உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொடங்கிவைத்தார். அவருடன் தொழில்நுட்ப கல்வி கமிஷனர் ராஜேந்திர ரத்னூ, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி உள்பட பலர் இருந்தனர்.
கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ–மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணையை உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் வழங்கினார். 10 பேரில் 9 பேர் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியையும், ஒரு மாணவி கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியையும் தேர்வு செய்தனர். முதல் 3 இடங்களை மாணவர்கள் பி.ஸ்ரீராம் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்.ஹரி விஷ்ணு (எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்), வி.சாய்ராம் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பெற்றனர். 3 பேருமே கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியை தேர்வு செய்தனர்.
உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் நிருபர்களிடம் கூறியதாவது:–
என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்த மாணவர்களில் சிலர் மருத்துவ படிப்புக்கு செல்வது வழக்கம். அப்படி சென்றால், அந்த இடங்கள் காலியாக இருக்கும். இதை மாற்றுவதற்கு தான் அடுத்த ஆண்டு முதல் ஆன்–லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.இந்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் பாடத்திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்புக்கு ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. மத்திய அரசிடம் இருந்து அப்படி அறிவிப்பு வந்தால், தமிழக அரசு காலம் எடுத்துக்கொள்ளும். ‘நீட்’ தேர்வு வருகிறது என்றால் முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
பி.இ., பி.டெக்., பி.ஆர்க். தேர்வில் தோல்வி அடைபவர் அந்த தாளை படிப்பு முடிந்த அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்திட வேண்டும். இது பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிவுரையில் இருக்கிறது. ஆனால் பலர் இதை செய்வதில்லை. இனிமேல் அப்படி செய்ய முடியாது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பிரச்சினையை சரிசெய்ய முழுமுயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் 2–வது இடத்தில் இருந்த இந்த பல்கலைக்கழகத்தை மீட்டெடுப்போம். அங்கு ஏற்கனவே பணிபுரிந்த பேராசிரியர்கள் மற்ற அரசு கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். பல்கலைக்கழகம் தயாரானதும் மீண்டும் அவர்கள் அழைத்து கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.