கர்நாடக மந்திரியின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.10 கோடி சிக்கியது


கர்நாடக மந்திரியின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.10 கோடி சிக்கியது
x
தினத்தந்தி 3 Aug 2017 12:15 AM GMT (Updated: 2 Aug 2017 6:45 PM GMT)

கர்நாடக மந்திரியின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.10 கோடி சிக்கி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் மின்சார துறை மந்திரியாக இருக்கும் டி.கே.சிவக்குமார் கல்குவாரி, ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான இவர் கர்நாடக காங்கிரஸ் அரசில் அதிகாரமிக்க மந்திரியாக உள்ளார்.

இந்த சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 3 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவுக்கு தாவியதால் மீதம் உள்ள எம்.எல்.ஏ.க் கள் குதிரைபேரத்தில் சிக்கி விடாமல் இருக்க அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து புறநகர் பகுதியில் உள்ள ‘ஈகிள்டன்’ என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்து உள்ளனர்.

அங்கு மொத்தம் 44 எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை மந்திரி சிவக்குமாரிடம் காங்கிரஸ் மேலிடம் ஒப்படைத்து இருக்கிறது.

இந்த நிலையில் பெங்களூரு, மைசூரு, கனகபுரா, ஹாசன், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினார்கள். சுமார் 120 அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

மந்திரி சிவக்குமாருக்கு சொந்தமாக பெங்களூரு சதாசிவநகர், கெங்கேரி பகுதிகளில் உள்ள வீடுகள், டெல்லி சப்தர்ஜங்கில் உள்ள வீடு, கனகபுரா சந்தேஹுடிஹள்ளி பங்களா, சொந்த ஊரான தொட்ட ஹாலஹள்ளியில் உள்ள வீடு, மேலும் அந்த பகுதியில் உள்ள 2 பங்களாக்கள், சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.யின் வீடு, அலுவலகம், டெல்லியில் உள்ள அவரது உதவியாளர் ஆஞ்சனேயாவின் வீடு, மைசூருவில் உள்ள சிவக் குமாரின் உறவினர் வீடு, பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள அவருடைய நெருங்கிய ஆதரவாளரும், ஜோதிடருமான துவாரகநாத் வீடு, கர்நாடக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கார்த்திக் கிரணின் வீடு, கர்நாடக மேல்-சபை காங்கிரஸ் உறுப்பினர் ரவியின் வீடு உள்பட 64 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ‘ஈகிள்டன்’ சொகுசு விடுதியிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஒரு அறையில் மந்திரி சிவக்குமார் தங்கி இருந்தார். அந்த அறையில் அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அவர் சில ஆவணங்களை கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. அவற்றை அவரிடம் இருந்து வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றினார் கள். அதன் பிறகு சிவக்குமாரை அங்கிருந்து காரில் அழைத்துக் கொண்டு பெங்களூரு சதா சிவநகரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர்.

அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த சோதனை பற்றிய தகவல் தெரிந்ததும் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் அவருடைய வீட்டின் முன்பு குவிந்தனர்.

வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான பணம், தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த சோதனையின் போது ரொக்கமாக ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டது. டெல்லியில் நடந்த சோதனையில் ரூ.7 கோடியே 90 லட்சமும், பெங்களூரு உள்ளிட்ட மற்ற இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2 கோடியே 23 லட்சமும் சிக்கியதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக நோட்டு எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மந்திரி சிவக்குமாருக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் உள்ள முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் சிவக்குமாரின் உறவினரான ஆசிரியர் ஒருவருக்கு பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. அந்த பாதுகாப்பு பெட்டகத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் திறந்து சோதனையிட்டு, அதில் இருந்து ஏராளமான நகைகளை கைப்பற்றியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிவக்குமாரின் டிரைவர் நாகராஜிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

வருமானவரி சோதனை பற்றி ‘ஈகிள்டன்’ தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது:-

“இன்று (அதாவது நேற்று) காலை 7 மணி அளவில் சிலர் எங்களிடம் வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறினர். நாங்கள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினோம். அவர்கள் அடையாள அட்டையை எடுத்துக்காட்டினர். அதன் பிறகு மந்திரி சிவக் குமார் எங்கு உள்ளார் என்று கேட்டனர். பிறகு அவர் இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் விசாரணை நடத்தினர். டெல்லி மேல்-சபை தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் பாரதீய ஜனதாவின் நோக்கம். அதனால் பிரதமர் மோடியும், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவும் இணைந்து வருமான வரி சோதனை மூலம் எங்களை மிரட்டி பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

‘ஈகிள்டன்’ விடுதியில் தங்கியுள்ள குஜராத் எம்.எல்.ஏ.க்களிடம் நாங்கள் சோதனை நடத்தவில்லை. அந்த விடுதியிலும் சோதனை செய்யவில்லை. மந்திரி தங்கி இருந்த அறையில் மட்டும் சோதனை நடத்தினோம். இந்த சோதனை நடத்துவது குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நடந்த விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது, வேறு மாநில எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகத்தில் வந்து தங்கி இருக்கும் நிகழ்வு என்பது எதிர்பாராத ஒன்று. அதற்கும், இந்த சோதனைக்கும் தொடர்பு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மந்திரி சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனையை கண்டித்து காங்கிரசார் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசியல் உள்நோக்கத்துடன், மந்திரி சிவக்குமாருக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

மந்திரியின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

Next Story