யுனெஸ்கோ ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்: தமிழக கோவில்களை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை


யுனெஸ்கோ ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்:  தமிழக கோவில்களை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2017 10:15 PM GMT (Updated: 16 Aug 2017 9:46 PM GMT)

தமிழக கோவில்களை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மக்களின் தாகத்தை தணிப்பதற்கான குடிநீரை கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பாரம்பரியச் சின்னங்களான கோவில்களை பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் அலட்சியமான செயல்களால் கோவில்கள் சிதைக்கப்படுகின்றன, என வரலாற்று ஆர்வலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு யுனெஸ்கோ அமைப்பிடம் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதன் காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில், கும்பகோணம் நாகேசுவரன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 300 பக்க அளவிலான இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்துள்ளது.

அ.தி.மு.க அரசின் ஆட்சியாளர்களோ தங்களின் சுய நலத்திற்காக பால்குடம், மண்சோறு, வேப்பிலை ஆடை, அங்கப்பிரதட்சணம் என ஊர் மக்களின் பார்வைக்கு நாடகம் ஆடிவிட்டு, அறநிலையத்துறையின் அலட்சியத்தால் கோவில்களைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அவலத்தைத்தான் யுனெஸ்கோ தனது இடைக்கால அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டினரெல்லாம் வியந்து பார்க்கும் தமிழக கோவில்களின் பெருமைகளைச் சிதைத்து, உலகளவிலான அமைப்பு குற்றம்சாட்டும் அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

கீழடி ஆய்வுகள் வாயிலாக வெளிப்படும் தமிழகத்தின் வரலாற்றுத் தொன்மையைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசை தி.மு.க. உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மாநில அரசோ, தன் பொறுப்பில் உள்ள கோவில்களை சிதைத்துக் கொண்டிருப்பது தமிழர்களின் வரலாற்றை அழிக்கும் அடாத செயலாகும்.

அறியாமை–அலட்சியம்–ஆணவப்போக்குடன் செயல்படும் அ.தி.மு.க. அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, பண்பாட்டுச் சின்னங்களைப் பாதுகாத்து, அவற்றை சிதைப்பதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story