சென்னையில் இருந்து சென்ற கார் மரத்தில் மோதி 2 சிறுமிகள் பலி; 11 பேர் படுகாயம்


சென்னையில் இருந்து சென்ற கார் மரத்தில் மோதி 2 சிறுமிகள் பலி; 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Aug 2017 8:18 PM GMT (Updated: 20 Aug 2017 8:18 PM GMT)

பேரணாம்பட்டு அருகே சென்னையில் இருந்து சென்ற கார் மரத்தில் மோதி 2 சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்திமேடு முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்தவர் சாஜித்அஹமத் (வயது 33). சென்னையில் உள்ள தனியார் ஷூ நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பேரணாம்பட்டு பகுதியில் வசிக்கும் இவரது மாமனார் உசேர்அஹமத் (55), மாமியார் உஸ்னரா (45) ஆகியோர் நேற்று முன்தினம் புனித ஹஜ் பயணத்துக்கு புறப்பட்டனர்.

அவர்களை வழியனுப்பி வைப்பதற்காக சாஜித்அஹமத் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பினார். பின்னர் அவர் தனது மனைவி யாஸ்மின் (29), மகள்கள் அத்துப்பா (4), அஷியா (3), மகன் யாகூப் (14) மற்றும் உறவினர்கள் 6 பேருடன் சென்னை விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார்.

காரை பைசூர்ரஹ்மான் (35) என்பவர் ஓட்டிச்சென்றார். சென்னை விமான நிலையத்தில் மாமனார், மாமியாரை வழியனுப்பி விட்டு சாஜித் அஹமத் மற்றும் உறவினர்கள் அதே காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது காரில் சென்னையை சேர்ந்த உறவினர் அகில்அஹமத் (31) என்பவரும் உடன் வந்தார். நேற்று அதிகாலை பேரணாம்பட்டு அருகே செர்லப்பல்லி கிராமம் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் சாஜித்அஹமத்வின் மகள்கள் அஷியாவும், அத்துப்பாவும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். சாஜித் அஹமத் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story