சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ‘தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும்’ என அறிவிப்பு


சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ‘தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும்’ என அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Aug 2017 12:00 AM GMT (Updated: 22 Aug 2017 6:49 PM GMT)

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள ரிசார்ட்டில் (சொகுசு விடுதியில்) தங்கி உள்ளனர்.

புதுச்சேரி,

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள ரிசார்ட்டில் (சொகுசு விடுதியில்) தங்கி உள்ளனர். தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரு பிரிவாக இருந்த அ.தி.மு.க. அணிகள் நேற்று முன்தினம் இணைந்தன. அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு துணை பொதுச் செயலாளராக உள்ள டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதியான சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ‘வின்ட் பிளவர்’ ரிசார்ட்டில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கு அறை பதிவு செய்யப்பட்டது. நேற்று மாலை 6 மணியளவில் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. அங்கு வந்தார்.

தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறும்போது, “திடீரென்று இங்கு வந்து தங்குவதற்கு விசேஷ காரணம் எதுவும் இல்லை. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. டி.டி.வி.தினகரனை தற்போது உள்ள நிலவரப்படி 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிக்கிறோம். இன்னும் நிறையபேர் வருவார்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். அதை பொறுத்து இருந்து பாருங்கள்” என்றார்.

அவரை தொடர்ந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக இந்த ரிசார்ட்டுக்கு வந்தனர். வெற்றிவேல் தவிர 18 எம்.எல்.ஏ.க்களும் அங்கு வந்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் முத்தையன், தங்கத்துரை ஆகியோர் கூறும்போது, “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து தான் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்வு செய்தோம். ஆனால் அப்போது ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. ஆட்சியை உடைக்கப்பார்த்தார். இரட்டை இலை சின்னத்தை கிடைக்கவிடாமல் தடுத்து தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தார். அப்படிப்பட்டவரை மீண்டும் சேர்ப்பது குறித்து எங்களிடம் கலந்தாலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தது வருத்தமளிக்கிறது. தொடர்ந்து எங்களது முடிவுகள் தமிழக அரசியலில் அதிரடியாக இருக்கும்” என்றனர்.

முன்னதாக சென்னை பெசன்ட்நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த பன்னீர்செல்வம், இப்போது ஊழல் அரசோடு கைகோர்த்துவிட்டார். எங்களை பொறுத்தமட்டில் கட்சி முக்கியம். இன்னும் 100 ஆண்டு காலம் கட்சியை கட்டிக்காத்து கொண்டுசெல்ல வேண்டும் என்று ஜெயலலிதா கூறியதை அடிப்படையாக வைத்தே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

தற்போது டி.டி.வி.தினகரனோடு 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் விருப்பப்படியே ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களை கடத்தி வைக்கவில்லை. இன்னும் பலர் அமைதியாக உள்ளனர். தேவைப்படும்போது அவர்கள் கண்டிப்பாக எங்களோடு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாஞ்சில்சம்பத் கூறும்போது, ‘கட்சியை பொறுத்தமட்டில் பொதுச் செயலாளருக்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. அவர், யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் இன்றைய தினம் நம்பிக்கை துரோகி ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். அறுவை சிகிச்சையை தற்போது தான் தொடங்கி உள்ளோம். கட்சி சின்னத்தை முடக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஆக்கி உள்ளார். இரும்புக்கோட்டையில் துருவுக்கு என்ன வேலை’ என்றார்.

Next Story