கமல்ஹாசனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்க்க முயற்சியா?


கமல்ஹாசனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்க்க முயற்சியா?
x
தினத்தந்தி 11 Sep 2017 11:30 PM GMT (Updated: 11 Sep 2017 7:51 PM GMT)

நடிகர் கமல்ஹாசனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்க்க முயற்சி நடப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதிக்க தயாராகி இருக்கிறார். இதற்கான ஆயத்த பணிகளை டுவிட்டரிலும், சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தொடங்கி மக்களை நெருங்கி வருகிறார்.

விரைவில் புதிய கட்சி தொடங்கும் முடிவை ரசிகர்கள் கூட்டத்தை கூட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திராவிட கொள்கை

கமல்ஹாசன் தேசிய சிந்தனையில் இருந்தாலும் திராவிட கொள்கைகளிலும், மாநில சுயாட்சியிலும் அக்கறை கொண்டு அதற்கு ஆதரவான கருத்துகளையே வெளியிட்டு வருகிறார். நீட் தேர்வு பிரச்சினையிலும் பல மொழிகள், பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் கல்வி சம்பந்தமான அதிகாரங்கள் மாநில அரசுகள் கையில்தான் இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார். எனவே திராவிட கொள்கைகளை சார்ந்தே அவரது புதிய கட்சி அறிவிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் கமல்ஹாசனை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் அவர் நெருக்கத்தை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கேரளாவுக்கு சென்று அங்குள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முதல்-மந்திரி பினராய் விஜயனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

பின்னர் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘பினராய் விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்தேன்’ என்று கூறினார். வருகிற 16-ந் தேதி கோழிக்கோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கருத்தரங்கிலும் கலந்துகொண்டு பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியும் இரு தினங்களுக்கு முன்பு “கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேர முடிவு எடுத்துவிட்டதாக கேள்விப்பட்டேன்” என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருக்கிறார். ஆனாலும் கமல்ஹாசன் தரப்பில் இது உறுதிப்படுத்தப்படவில்லை. புதிய கட்சி தொடங்கும் முடிவில் அவர் இருப்பதாகவே கூறப்படுகிறது. 

Next Story