பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள்


பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
x
தினத்தந்தி 25 Sep 2017 10:02 AM GMT (Updated: 25 Sep 2017 10:01 AM GMT)

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலைநிறுத்தம் ஒத்திவைகப்பட்டு உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூறி உள்ளன.

சென்னை,

அரசு  போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 13 வது ஊதிய  ஒப்பந்தத்தை  உடனடியாக அமல் படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு  வழங்க வேண்டிய   ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட   பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள்  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டம்   நடத்தப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போக்குவரத்து  கழக மேலாண்மை இயக்குனர்கள், போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் தொழிலாளர் துறை  ஆணையருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் ஊதிய ஒப்பந்தம்  தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமூகமாக பேசி தீர்க்கவும் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 19- தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் போக்குவரத்து துறை அமைச்சருடன் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி  சென்னை குரோம்பேட்டையில்  உள்ள மாநகர  போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.  இதில் போக்குவரத்து துறை செயலாளர், 8 போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள்  மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு- சார்பாக  47 சங்கங்கள் பங்கேற்றன.

போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன், தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. போக்குவரத்து அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ1200 ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

சம்பள பேச்சுவார்த்தை ஓரளவு முடிவு பெற்று விட்டது . போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக  மாதம் ரூ.1,200 வீதம் ரூ.15 கோடி வழங்கப்படும் . நிலுவைத் தொகை வழங்குவது குறித்து டிச. 9ம் தேதி, உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். தொழிற்சங்க நிர்வாகிகளுடன் டிசம்பர் முதல் வாரத்தில் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார்.

தொழிற்சங்கத்தினர் கூறும் போது அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவை அடுத்து வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறினர்.

Next Story