ஜெயலலிதா மரணம் : ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்


ஜெயலலிதா மரணம் :  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
x
தினத்தந்தி 25 Sep 2017 11:25 AM GMT (Updated: 25 Sep 2017 11:24 AM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து அரசு ஆணை பிறபிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 72 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா எப்படியும் உயிர் பிழைத்து திரும்பி விடுவார் என்றே அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற வகையிலேயே
ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் வெளிவந்தன.

அவர் இட்லி சாப்பிட்ட தாகவும், தன்னை சந்தித்து உடல்நிலை பற்றி விசாரித்த முக்கிய பிரமுகர்களை பார்த்து கை அசைத்ததாகவும் அவ்வப்போது சாதகமான தகவல்களே வெளியாகி கொண்டிருந்தன.

இதன் காரணமாக அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டனர்.  தினமும்  அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு காத்துக்கிடந்த
அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அவ்வப்போது பேட்டியும் அளித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் அம்மாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் ஜெயலலிதாவின் உயிர் திடீரென பிரிந்தது. இது அ.தி.மு.க.வினரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியில் வந்ததும், இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பினார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை முதலில் கூறியவர். இதனை மையமாக வைத்தே தனி அணியாக ஆதரவாளர்களை திரட்டினார். ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் கடந்த மாதம் கை கோர்த்தனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மர்மம் நீடித்து வரும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்பத்திரியில் இருந்த போது, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று கூறியது எல்லாம் பொய். அவரை யாரும் பார்க்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. மக்களிடம் பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் பொது மேடையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைத்து  அரசு ஆணை பிறபிக்கபட்டு உள்ளது.  ஓய்வு பெற்ற  நீதிபதி ஆறுமுக சாமி  தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கபட்டு உள்ளது. 

Next Story