கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.360 கோடி செலவில் காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை


கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.360 கோடி செலவில் காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
x
தினத்தந்தி 11 Oct 2017 11:45 PM GMT (Updated: 11 Oct 2017 3:26 PM GMT)

கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.360 கோடி செலவில் காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ரூ.360 கோடி செலவில் லோட்டஸ் புட்வேர் எண்டர்பிரைசஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களான பேர்வே எண்டர்பிரைசஸ் மற்றும் செய்யார் சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ள காலணி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த தொழிற்சாலைக்காக பர்கூர் சிப்காட் தொழில் வளாகத்தில் 146.72 ஏக்கர் நிலம், பர்கூர் சிப்காட் நிறுவனத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலமாக சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் ரூ.12 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சி பள்ளி, ரூ.75 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சி பள்ளிக்கான நிர்வாக கட்டிடம், ரூ.3 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200 காவலர்களுக்கான பாளையம் என மொத்தம் ரூ.16 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்களையும் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்துவைத்தார்.


மேலும், தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தை (Official Facebook of TamilnaduPolice) எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் தூத்துக்குடி, ராஜீவ் காந்தி நகர் திட்டப்பகுதியில் 5.12 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.29 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 444 அடுக்குமாடி குடியிருப்புகளை எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்துவைத்தார். மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் வேலூர், குளவிமேடு திட்டப்பகுதியில் 1.87 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.15 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள்; தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் காஞ்சீபுரம் மாவட்டம்,

சோழிங்கநல்லூரில் 14.41 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.496 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,500 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம்–நொளம்பூரில் 0.37 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.7 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் வருவாய் பிரிவினருக்கான 24 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம்–அம்பத்தூரில் 1.38 ஏக்கர் நில பரப்பளவில் ரூ.29 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் வருவாய் பிரிவினருக்கான 92 அடுக்குமாடி குடியிருப்புகள்; காஞ்சீபுரம் மாவட்டம்–மதுராந்தகம், கடப்பேரி கிராமத்தில் 0.50 ஏக்கர் நில பரப்பளவில் ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறைந்த வருவாய் பிரிவினருக்கான 14 வீடுகள்;

இந்த நிகழ்ச்சியின்போது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story