டெங்கு காய்ச்சல் பரவ காரணமான வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம்


டெங்கு காய்ச்சல் பரவ காரணமான வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 Oct 2017 12:15 AM GMT (Updated: 19 Oct 2017 6:00 PM GMT)

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகரிக்கின்றன. அந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எச்சரிக்கை நோட்டீஸ் பெற்ற பிறகும், கொசுக்கள் உற்பத்திக்கு காரணமான கழிவுப் பொருட்களை அகற்றாமல் இருந்த உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.16 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது.

Next Story