அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது


அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 19 Oct 2017 10:00 PM GMT (Updated: 19 Oct 2017 6:54 PM GMT)

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மத்திய குழு வந்து சென்ற பிறகும் டெங்கு பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லையே?

பதில்:- அதனால் தான் ஒரே வரியில், இங்கு நடக்கும் டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான் டெங்கு பிரச்சினை ஒழியும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

கேள்வி:- டெங்கு காய்ச்சலில் இறந்தவர்களின் விவரங்களை அரசு மறைக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்:- டெங்குவால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்த விவரங்களை சொல்லாமல், உண்மைகளை மூடி மறைக்கிறார்கள்.

கேள்வி:- நாளை (இன்று) நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதுபற்றி விவாதிக்கப்பட இருக்கின்றது?

பதில்:- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்ப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. வேறு விவாதங்கள் நடைபெற்றால் அந்த கூட்டம் முடிந்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தல், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், டெங்கு காய்ச்சல் மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

Next Story