நிலம் தருவதாக கூறி 12 லட்சம் பேரிடம் பணம் வசூலித்து மோசடி: பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நீதிபதி தலைமையில் குழு ஐகோர்ட்டு உத்தரவு


நிலம் தருவதாக கூறி 12 லட்சம் பேரிடம் பணம் வசூலித்து மோசடி: பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நீதிபதி தலைமையில் குழு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Oct 2017 9:45 PM GMT (Updated: 19 Oct 2017 8:09 PM GMT)

நிலம் தருவதாக கூறி 12 லட்சம் பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ‘டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்துபவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நிலம் வழங்கப்படும் என்று அறிவித்தது. முன்னதாக இந்த நிறுவனம் ‘டிஸ்க் அக்ரோ டெக்’ நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

இந்த திட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 27 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணம் செலுத்தி வந்தனர். 2011-ம் ஆண்டு வரை இவர்களிடம் இருந்து அந்த நிறுவனம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்தநிலையில் ஏற்கனவே தெரிவித்தபடி அந்த நிறுவனம் பணம் செலுத்தியவர்களுக்கு நிலம் வழங்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதேபோன்று ‘செபி’யிலும்(பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம்) புகார் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குனர்கள் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அப்போது அவர்கள், நிறுவனத்தின் பெயரில் இருக்கும் சொத்துகளை விற்று பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.

இந்தநிலையில், நிறுவனம் யாரிடம் இருந்தும் முதலீடுகளை பெறக்கூடாது என்றும், புதிய திட்டங்களை அறிவிக்கக்கூடாது என்றும் ‘செபி’ உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நிறுவனத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அக்பர் அலியை ஆணையராக நியமித்து நிறுவனத்தின் சொத்துகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

ஐகோர்ட்டு நியமித்த ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், இந்த நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 520 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறி உள்ளார். 12 லட்சத்து 27 ஆயிரம் பேரிடம் ஆயிரத்து 137 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை இந்த நிறுவனம் வசூலித்துள்ளதாகவும், இந்த தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக திரும்ப கிடைக்க நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் ஆணையர் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

அதன்படி ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பால் வசந்தகுமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. அந்தகுழுவில் மூத்த வக்கீல்கள் பி.குமார், எம்.எஸ்.கிருஷ்ணன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், நில நிர்வாக ஆணையர் அல்லது அந்த துறையில் பணியாற்றும் இணை ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி, உதவி கலெக்டர் அந்தஸ்தில் உள்ள 2 அதிகாரிகள், பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ‘செபி’ சார்பில் துணை பொது மேலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஆகியோர் இடம் பெறுவர்.

இந்தகுழுவினர் நிறுவனத்தின் சொத்துகளை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்கள் செலுத்திய தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story