முதல்-அமைச்சருக்கு 18 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் அரசு டாக்டர்கள் சங்கம் முடிவு


முதல்-அமைச்சருக்கு 18 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் அரசு டாக்டர்கள் சங்கம் முடிவு
x
தினத்தந்தி 21 Oct 2017 9:15 PM GMT (Updated: 21 Oct 2017 7:55 PM GMT)

அரசு டாக்டர்களின் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 18 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடத்துவது என டாக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சென்னை,

அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சங்கத்தின் சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் டாக்டர் சாமிநாதன், மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை தலைவர் டாக்டர் இளஞ்சேரலாதன், பொருளாளர் டாக்டர் பெருமாள்பிள்ளை, செயலாளர் டாக்டர் அசோக் உள்பட ஏராளமான டாக்டர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

18 ஆயிரம் தபால்கள்

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வேண்டும். பெண் டாக்டர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு வேண்டும். பணி காலங்களில் இறக்கும் டாக்டர்களுக்கு தொகுப்புநிதி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் தபால் அட்டைகளில் எழுதி முதல்-அமைச்சருக்கு அனுப்புவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story