நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரை படிக்க கோனார் தமிழ் உரை நூல் தேவை தமிழிசை சவுந்தரராஜன் கருத்து


நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரை படிக்க கோனார் தமிழ் உரை நூல் தேவை தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
x
தினத்தந்தி 20 Nov 2017 11:15 PM GMT (Updated: 20 Nov 2017 8:56 PM GMT)

நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்துகளை புரிந்துகொள்வதற்கு ஒரு கோனார் தமிழ் உரை வந்தால் நன்றாக இருக்கும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசனின் கருத்துகளை புரிந்துகொள்ள கோனார் தமிழ் உரை வந்தால் நன்றாக இருக்கும் என்று ஓட்டல்களில் ஜி.எஸ்.டி. வரி குறித்து ஆய்வு செய்த பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி மாற்ற முடிவுகளின்படி, ஓட்டல்களின் மீதான சரக்கு சேவை வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 18 சதவீதமாக வரி விதிப்பு இருந்தபோது, 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் வாடிக்கையாளர்கள் வரி சேர்த்து ரூ.118 கொடுக்கவேண்டும். திருத்தப்பட்ட சரக்கு சேவை வரி அறிமுகமாகிய பின்னர் இது ரூ.105 ஆக குறைக்கப்படவேண்டும்.

ஆனால் சில ஓட்டல்களில் இந்த விலை குறைப்பை அமல்படுத்தாமல், ஓட்டல் பண்டங்களின் விலையை உயர்த்திவிட்டார்கள். இதனால் ஓட்டலில் சாப்பிடுபவர்கள் கடுமையான அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை பாண்டிபஜாரில் உள்ள 2 ஓட்டல்களில் நேற்று காலையில் இட்லி, வடை, கேசரி, குலோப் ஜாமூன் சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சரக்கு சேவை வரி குறைக்கப்பட்ட தொகை சாப்பாடு கட்டணத்தில் முறையாக வசூலிக்கப்படுகிறதா? என்பதை அவர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஓட்டல்களுக்கான சரக்கு சேவை வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஆனால் இதையும் தேர்தலோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கொச்சைப்படுத்துகிறது. ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்பட்டு வரி குறைக்கப்படுகிறது.

ஆனால் பல ஓட்டல்களில் சரக்கு சேவை வரியை குறைத்து போட்டாலும் ‘எம்.ஆர்.பி.’ விலையை ஏற்றி அதை ஈடு செய்துவருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. எனவே சரக்கு சேவை வரி நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் ஆய்வு செய்யப்படும். முதலில் அறிவுரை வழங்கப்படும். அவர்கள் சரி செய்யவில்லை என்றால் புகார் செய்யப்படும்.

சில ஓட்டல்கள் சரக்கு சேவை வரியை குறைக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக ஓட்டல் நிர்வாகத்தினர் சரக்கு சேவை வரியை குறைக்கவேண்டும்.

நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்துகளை புரிந்துகொள்வதற்கு ஒரு கோனார் தமிழ் உரை வந்தால் நன்றாக இருக்கும். புரியாமல் பதிவுகளை போடுவதில் அவர் விற்பன்னராக இருக்கிறார். டுவிட்டரில் அவரவர் கருத்துகளை பதிவு செய்கிறார்கள். அதை அவரவர் கருத்தாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

காங்கிரஸ் தலைவராக யாரை தேர்வு செய்தாலும் அவர்கள் கட்சியை வளர்ப்பதற்கு பாடுபடட்டும். ஆனால் மறுபடியும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தான் காங்கிரசில் பதவி வழங்கப்படுகிறது என்பதை மக்கள் இன்று உணர்ந்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story