திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 23 Nov 2017 9:15 PM GMT (Updated: 23 Nov 2017 7:29 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 2-ந் தேதி 2,668 அடி மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை காண தமிழ்நாடு, பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.

அதைத் தொடர்ந்து விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார்கள். கோவில் குருக்கள் மந்திரங்கள் ஓத தங்ககொடி மரத்தில் அதிகாலை 4.50 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து காலை 10 மணி அளவில் கண்ணாடி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் வெவ்வேறு வாகனங்களில் நடக் கிறது. கார்த்திகை தீபத்திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. அன்று காலையில் 63 நாயன்மார்கள் வீதிஉலா நடக்கிறது.

29-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலில் விநாயகர் தேரும், அடுத்து முருகர் தேரும் இழுக்கப்படு கிறது. தொடர்ந்து பெரியதேர் இழுக்கப்படும். பெரிய தேர்நிலைக்கு வந்ததும், இரவில் அம்மன் தேர் இழுக்கப்படும். அந்த தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படும்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) ஏற்றப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

Next Story