மண்டபம் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்


மண்டபம் இடிந்து விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
x
தினத்தந்தி 14 Dec 2017 10:30 PM GMT (Updated: 14 Dec 2017 8:22 PM GMT)

திருச்செந்தூர் கோவிலின் மண்டபம் இடிந்து விழுந்ததில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் சுற்றுப்பிரகார மண்டபத்தின் வடகிழக்கு பகுதியில், மேற்கூரை கான்கிரீட் இடிந்தது. அதன் கீழ் நின்று கொண்டிருந்த ரவி மனைவி பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

இறந்த பேச்சியம்மாளின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துகொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் கந்தசாமி, செந்தில்ஆறுமுகம் ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க கலெக்டருக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துகொள்கிறேன்.

கோவிலில் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், இறந்தவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா மற்றும் தூத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்படாத வகையில், தமிழ்நாட்டிலுள்ள கோவில்களின் கட்டிட ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய உடனடியாக களஆய்வு மேற்கொள்ளவும், அறநிலையத்துறை ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கோவில் நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story