தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்


தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 11 Jan 2018 6:45 PM GMT (Updated: 11 Jan 2018 6:37 PM GMT)

தகுதிகாண் முறையை நீக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தகுதிகாண் முறையை நீக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறை இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிராக அமைந்திருப்பதால் அதை நீக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே பா.ம.க. எதிர்த்து வருகிறது.

அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த உயர்நிலைக்குழுக் கூட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வை நடத்துவது என்றும், தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யாமல் தொடர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாகும். ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டது இல்லை. 12-ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன் 80 சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பதே சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100 சதவீதம் மதிப்பெண் எடுப்பதே சர்வ சாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடைசியாக நடந்த ஆசிரியர் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150-க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதே நேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப் படிப்பை முடித்தவர்கள் ஆவர். இதேநிலை நீடித்தால் இவர்களுக்கு ஆசிரியர் பணி பகல் கனவாகவே இருக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும், கடந்த ஆண்டில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும் ஒரே மாதிரியாக கணக்கிடுவதை விட கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. இது சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும். தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்து சமூக நீதியை நிலை நிறுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story