பஸ்-கார் மோதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் பலி


பஸ்-கார் மோதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jan 2018 10:00 PM GMT (Updated: 15 Jan 2018 8:03 PM GMT)

ஓசூர் அருகே அரசு பஸ்-கார் மோதிய கோர விபத்தில் 4 பள்ளி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் பலியானார்கள்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு நேற்று முன்தினம் மதியம் தமிழக அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் ஓசூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓசூரை தாண்டி சூளகிரி நோக்கி சென்றது.

சூளகிரி பவர்கிரீடு அருகே சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் சாலையின் தடுப்புசுவரில் மோதி எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கார் மீது ஏறி தறிகெட்டு ஓடியது. அந்த நேரம் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினார்கள்.

6 பேர் பலி

சிறிது தூரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓசூரைச் சேர்ந்த மணீஷ் (வயது 21), சஞ்சய் (17), ஆதர்ஷ் (16), இசக்கியா (18), ஆகாஷ் (18) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பஸ் சக்கரத்தில் சிக்கி பஸ்சின் கண்டக்டர் தர்மபுரி மாவட்டம் ஏமகுட்டியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவரும் பலியானார்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 30 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விபத்தில் பலியானவர்களில் மணீஷ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். சஞ்சய், ஆதர்ஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் பிளஸ்-2 படித்து வந்தார்கள். இசக்கியப்பா பிளஸ்-1 படித்து வந்தார். 

Next Story