மதுரையில் அமெரிக்க பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் காரைக்குடி டாக்டரை மணந்தார்
மதுரையில், காரைக்குடியை சேர்ந்த டாக்டரை இந்து முறைப்படி அமெரிக்க பெண் திருமணம் செய்து கொண்டார். #madurai #American #Hindu
மதுரை,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன். இவர் கடந்த 1983-ம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன்பின்னர் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார்.
இவருடைய 2-வது மகன் சிவக்குமார்(வயது 29). இவர் அங்கு டாக்டராக பணியாற்றி வருகிறார். படிக்கும் காலத்திலேயே இவரது வீட்டின் அருகே வசித்து வந்த ஸ்டீவன் பவல் மகள் எலிசபெத் ஆன்(29) என்பவரை காதலித்து வந்தார். இவர்களது காதல் வீட்டிற்கு தெரிந்ததை தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்து முறைப்படி திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய ஸ்டீவன்பவல், எலிசபெத் ஆன் ஆகியோர் இதுகுறித்து சிவக்குமார், அவருடைய தந்தை அழகப்பன் ஆகியோரிடம் கூறினர். இதைத்தொடர்ந்து மதுரையில் இந்து முறைப்படி திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.
அதன்படி நேற்று காலை அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் இந்து முறைப்படி சிவக்குமார்-எலிசபெத் ஆன் திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்டீவன் பவல், அவருடைய மனைவி டானா பவல், மகன் மைக்கேல் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் என 12 பேர் அமெரிக்காவில் இருந்து மதுரை வந்து திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சேலை அணிந்திருந்தனர்.
Related Tags :
Next Story