காதலித்து திருமணம் செய்த மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை


காதலித்து திருமணம் செய்த மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை
x
தினத்தந்தி 17 Jan 2017 9:42 AM GMT (Updated: 17 Jan 2017 9:42 AM GMT)

பாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்த மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு நீதி மன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது.

லாகூர்

பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பீபி, இவரது மகள் ஜீனத். ஜீனத் அதே பகுதியை சேர்ந்த ஹசன்கான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் கடந்தாண்டு இவருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

காதல் ஜோடியினர் தனியாக வீடு எடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் பர்வீன் பீபி மற்றும் சகோதரர் அனீஸ், ஜீனத்தை சந்தித்து இருவரையும் ஏற்றுக் கொள்வதாகவும், திருமண வரவேற்பிற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அழைத்துள்ளனர்.

இதனை நம்பி தாய் மற்றும் சகோதரருடன் சென்ற ஜீனத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். ஒருகட்டத்தில் ஜீனத் மீது மண்எண்ணைய் ஊற்றி தீ வைத்து உயிருடன் கொளுத்தியுள்ளனர்.

இதில் ஜீனத் பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பர்வீன் பீபி மற்றும் அனீஸை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி பர்வீன் பீபிக்கு மரண தண்டனையும், அனீசுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story