பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடாததால் குற்றவாளியை விடுதலை செய்த நீதிபதி


பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடாததால் குற்றவாளியை விடுதலை செய்த நீதிபதி
x
தினத்தந்தி 27 March 2017 7:32 AM GMT (Updated: 27 March 2017 7:32 AM GMT)

இத்தாலியில் பாலியல் பலாத்காரத்தின் போது பெண் சத்தம் போடாததால் குற்றவாளியை நீதிபதி ஒருவர் விடுதலை செய்துள்ளார்.

இத்தாலியின் ஏஎன்எஸ்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

ரெட் கிராஸில் பணிபுரியும் ஒரு பெண்ணை அவரது உயர் அதிகாரியான 46 வயது நபர் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதில் தனது உயர் அதிகாரி தன்னை அடிக்கடி  பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் அவரது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலை வழங்கப்படாது என மிரட்டியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு வடக்கு இத்தாலியின் டூரின் நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அந்த நபர் பலாத்காரத்தின்போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் கத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஆனால் இதற்கு பதில் அளித்த அந்த பெண், ஒருவர் உடலுறவுக்கு அழைக்கும் போது முடியாது என கூறும் வார்த்தையே போதுமானது. மேலும் என்னை பலாத்காரம் செய்தவர் என்னை விட பலசாலி என்பதால் அவரை என்னால் தடுக்க முடியவில்லை என்றார்.

ஆனால் இதனை ஏற்காத நீதிபதி, பலாத்காரத்தின்போது, குற்றவாளியிடம் 'வேண்டாம்' என பெண் கூறுவது போதுமான ஆதாரமாக இல்லை என்றார். மேலும் பலாத்காரத்தின் போது நிறுத்துங்கள், வேண்டாம் என்றுதான் அந்த பெண் கூறியுள்ளாரே தவிர, கத்தி கூச்சலிடவில்லை யாரையும் உதவிக்கும் அழைக்கவில்லை என்றும் விளக்கமளித்த நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் குற்றவாளியின் பெயரும் வெளியிடப்படவில்லை. நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் கூச்சலிடுவதை வைத்து அவள் படும் துன்பத்தை அளவிட முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பெண் சத்தம் போடாததால் தான் குற்றவாளி விடுவிக்கப்பட்டாரா என விசாரணை நடத்த அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story