ஃபூகுஷிமாவில் உறைந்த நிலையில் அணு எரிபொருள்?
நிலநடுக்கம், சுனாமியால் தகர்ந்த ஜப்பானின் ஃபூகுஷிமா அணு உலையில் உறைந்த நிலையில் அணு எரிபொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஃபூகுஷிமா
விபத்திற்கு பிறகு கடுமையாக கதிர் வீச்சு கொண்ட பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. லிட்டில் சன்பிஷ் எனும் ரோபோவின் உதவியுடன் ஆய்வு நடத்திய போது மூன்றாவது அணு உலையின் இடிபாடுகளில் உறைந்த நிலையில் அணு எரிபொருள் உருகிய எஃகு கலன்களுடன் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக உருகிய அணு எரிபொருளை கண்டுள்ளதாக ஃபூகுஷிமா அணு மின் நிலையத்தை நடத்தி வந்த டோக்கியோ எலக்டிரிக் பவர் கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூய்மைப்படுத்தும் பணிக்கு இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என்று கூறப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தினால் 2,00,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சுனாமியினால் சுமார் 18,000 பேரைக் காணவில்லை அல்லது இறந்து விட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. அணு உலை விபத்தினால் யாரும் நேரடியாக இறக்கவில்லை என்று கூறப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடிபாடுகளை ஆராய மேலும் கால அவகாசம் தேவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story