டோக்லாம் மோதல் விவகாரம்; ராஜ்நாத் சிங் நம்பிக்கையை சீனா நிராகரித்தது


டோக்லாம் மோதல் விவகாரம்; ராஜ்நாத் சிங் நம்பிக்கையை சீனா நிராகரித்தது
x
தினத்தந்தி 22 Aug 2017 12:08 PM GMT (Updated: 22 Aug 2017 12:08 PM GMT)

டோக்லாம் மோதல் விவகாரத்தில் விரைவில் தீர்வு என்ற ராஜ்நாத் சிங்கின் நம்பிக்கையை சீனா நிராகரித்தது.



பெய்ஜிங்,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் படையை குவித்து உள்ளது. இந்தியாவும் இங்கு படை வீரர்களை குவித்து இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. 

டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘எல்லையில் இந்தியா–சீனா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க விரைவில் தீர்வு காணப்படும். இந்த வி‌ஷயத்தில் சீனா சாதகமான நகர்வை மேற்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது என்ற செய்தியை பக்கத்து நாடுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். அதேநேரம் இந்திய எல்லைகளை பாதுகாத்துக் கொள்ளும் அனைத்து திறமைகளும் நமது பாதுகாப்பு படைகளுக்கு இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார். இந்த நிலையில், காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள பான்கோங் ஏரி பகுதியில் கடந்த 15–ந்தேதி இந்திய படையினர் தனது நாட்டின் ராணுவத்தினர் மீது வன்முறை நடவடிக்கையில் இறங்கியதாக சீனா குற்றம் சாட்டியது.

டோக்லாம் மோதல் விவகாரத்தில் விரைவில் தீர்வு என்ற ராஜ்நாத் சிங்கின் நம்பிக்கையை சீனா நிராகரித்தது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சங்யிங் பேசுகையில், “டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்ததை இந்தியா தடுத்து நிறுத்திய காரணமானது பொருத்தமற்றது. எனவே முன்நிபந்தனையாக இந்திய ராணுவம் மற்றும் தளவாடங்களை அங்கிருந்து திரும்பப்பெற வேண்டும்,” என கூறிஉள்ளார். 

Next Story