மியான்மரில் கண்ணி வெடிகுண்டுகளால் ஊனமாகும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள்


மியான்மரில் கண்ணி வெடிகுண்டுகளால் ஊனமாகும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள்
x
தினத்தந்தி 13 Sep 2017 12:43 PM GMT (Updated: 13 Sep 2017 12:43 PM GMT)

மியான்மரில் கண்ணி வெடிகுண்டுகளால் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் ஊனமாகும் கோரமான சம்பவம் நேரிட்டு உள்ளது.

டாக்கா,


மியான்மர் நாட்டில் ராகினேவில் செயல்பட்டு வரும் “தி அரக்கான் ரோஹிங்யா சால்வேஷன் ஆர்மி” என்ற போராளிகள் குழு ரோஹிங்யா இஸ்லாமியர்களை பாதுகாப்பதாக கூறிவருகிறது. ஆனால் இந்த அமைப்பானது பயங்கரவாத இயக்கமாக மியான்மர் கூறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி போராளிகள் குழு பிராந்தியத்தில் இருந்த சுமார் 30 ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. 

இதனையடுத்து பாதுகாப்பு படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. இதில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். 

இதனால் மக்கள் உயிருக்கு பயந்து வங்காளதேசம் செல்கின்றனர், இதுவரையில் 4 லட்சம் வரையில் மியான்மர் சென்று உள்ளனர்.  

இப்போது ரோஹிங்யா இஸ்லாமியர்கள் பெருமளவு இடம்பெயர்வுக்கு காரணம் பாதுகாப்பு படையினர் மற்றும் போராளிகள் குழுவிற்கு இடையிலான மோதலே என கூறப்படுகிறது.  
 
இதற்கிடையே வங்காளதேசம் எல்லையில் மியான்மர் கண்ணி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து உள்ளது எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மியான்மரில் பதுக்கி வைக்கப்படும் கண்ணி வெடிகுண்டுகளால் வங்காளதேசத்திற்கும் வரும் அகதிகள் இலக்காக்கப்படுகின்றனர். 
 
மியான்மர் ராணுவ தரப்பு தகவல்கள் கண்ணி வெடிகுண்டுகள் எல்லையில் 1990-ல் எல்லையில் அத்துமீறி நுழைவதை தடுக்க வைக்கப்பட்டது என்கிறது. மியான்மரில் கண்ணி வெடிகுண்டுகளில் கால் வைத்து இஸ்லாமியர்கள் ஊனமாகும் அவல நிலையும் நேரிட்டு உள்ளது.

மியான்மரில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் சிறார்கள் ஊனமான சம்பவம் நடந்து உள்ளது. சிறார்களுக்கு வங்காளதேச மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறார்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று பிபிசி அவர்களுடைய தயாரிடம் பேட்டி கண்டு உள்ளது. மியான்மரில் இருந்து சிறுவன் அஸிசு ஹக் (வயது 15) கால்கள் சிதறிய நிலையிலே வந்து உள்ளான். அஸிசுவின் மற்றொரு சகோதரனும் பாதிக்கப்பட்டு மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். 

பாதிக்கப்பட்ட சிறார்களின் தாயார் பேசுகையில், “என்னுடைய இரு குழந்தைகளும் மிகவும் மோசமாக காயம் அடைந்து உள்ளனர், இவர்கள் இறப்பதற்கு இணையானது, இதற்கு அல்லா அவர்களை ஏற்றுக் கொள்வதே நல்லது, என்னுடைய மகன்கள் அவ்வளவு காயம் அடைந்து உள்ளனர்,” என கண்ணீர் மல்க பேசிஉள்ளார். காயம் அடைந்த பெண் சாபிகுர் நாகர் பேசுகையில், மியான்மரில் எங்களுடைய சமூதாயம் குறிவைக்கப்பட்டதால் நாங்கள் இங்குவந்தோம், நாங்கள் எல்லையை கடந்த போது, என்னுடைய மூன்று மகன்கள் கண்ணி வெடிகுண்டு மீது மிதித்துவிட்டனர். அவர்கள் (மியான்மர் ராணுவம்) எங்களை துப்பாக்கியால் சுடுகிறது, அவர்களே கண்ணி வெடிகுண்டையும் வைக்கிறார்கள்,” என கூறிஉள்ளார். 

சிறுவன் அஸிசு ஹக்கின் கால்கள் குண்டு வெடித்ததில் மிகவும் மோசமாக சிதறிவிட்டது, சிறுவனின் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு உள்ளது. சிறுவனை எப்படி காப்பாற்ற முயற்சி செய்தேன் என மருத்துவமனை டாக்டர் பேசுகையில் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார். என்னால் வெற்றிகரமாக முடியும் என்றுகூட எதிர்பார்க்கவில்லை. சிறுவன் அஸிசுவின் ரத்த பிரிவும் எளிதாக கிடைப்பது கிடையாது, எங்களுடைய மருத்துவமனை இரத்த வங்கியிலும் அந்த பிரிவு இரத்தம் கிடையாது, இரத்தம் வழங்கும் மையங்களிலும் இரத்தம் கிடையாது என குறிப்பிட்டு உள்ளார். மியான்மர் - வங்கதேசம் எல்லையில் கடந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வெடித்தது. 

இதற்கிடையே மியான்மர் ராணுவம் எல்லையில் கண்ணிவெடிகுண்டை பதுக்கி வருகிறது என்பது வங்காளதேசத்தின் குற்றச்சாட்டாக உள்ளது.


Next Story