ரோஹிங்யா இஸ்லாமியர்கள் நெருக்கடி, ஐ.நா. கூட்டத்தை சூ கி தவிர்க்கிறார்


ரோஹிங்யா இஸ்லாமியர்கள் நெருக்கடி, ஐ.நா. கூட்டத்தை சூ கி தவிர்க்கிறார்
x
தினத்தந்தி 13 Sep 2017 1:56 PM GMT (Updated: 13 Sep 2017 1:56 PM GMT)

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் பெரும் நெருக்கடி எழுந்து உள்ளநிலையில் சூ கி ஐ.நா. சபை கூட்டத்தை தவிர்த்து உள்ளார்.


 யங்கூன், 

மியான்மர் நாட்டில் ராகினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது மியான்மர் ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு உள்ளது. உள்ளூர் புத்த மதத்தினரும் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்லாமியர்களின் வீடு எரிக்கப்படுகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி முடிந்து சூ கியின் மக்களாட்சி தொடங்கினாலும், ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீதான வன்முறையில் மாற்றம் இல்லாத நிலையே நீடிக்கிறது. இவ்விவகாரத்தில் சூ கியின் அரசு சர்வதேச விமர்சனத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளாகி உள்ளது.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் மியான்மருக்கு நெருக்கடி கொடுப்பதில் உலக நாடுகள் மத்தியில் பிளவு காணப்படுகிறது. மியான்மர் அரசின் ராணுவ நடவடிக்கையை எப்போதும் போல பாதுகாப்பு காரணம் காட்டி சீனா ஆதரவு தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா  “சட்டவிதிகளுக்கு மியான்மர் அதிகாரிகள் மதிப்பளிக்க வேண்டும், மியான்மர் அரசு வன்முறையை தடுக்க வேண்டும், அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் இடம்பெயர்வதை தடுக்க வேண்டும் எனவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என கூறிஉள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் உடனடியாக விவாதம் நடைபெற வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து உள்ளன. அகதிகள் விவகாரத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையமும் சூ கியை கடுமையாக சாடிஉள்ளது. அகதிகள் எந்தஒரு உதவியும் கிடைக்கப்பெறாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்துகிறது.

நியூயார்க்கில் ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையில் நடக்க உள்ளது. இதில் மியான்மரின் சூ கி பங்கேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பயணத்தை சூ கி ரத்து செய்துவிட்டார் என செய்திகள் வெளியாகி உள்ளது. உலக நாடுகள் மத்தியில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளநிலையில் இந்த முடிவை சூ கி எடுத்து உள்ளார் என கூறப்படுகிறது. இதற்கிடையே சூ கி விமர்சனங்கள் அல்லது பிரச்சனைகளை எதிர்க்கொள்ள பயந்தது கிடையாது, என அவருடைய உதவியாளர் கூறிஉள்ளார். 

மாறாக சூ கி 19-ம் தேதி மியான்மர் மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.  


Next Story