மியான்மரில் பேரழிவு நிலையில் ரோஹிங்யா முஸ்லீம்கள் : ஐ.நா. பொது செயலாளர் குற்றசாட்டு


மியான்மரில்  பேரழிவு நிலையில் ரோஹிங்யா முஸ்லீம்கள் : ஐ.நா. பொது செயலாளர் குற்றசாட்டு
x
தினத்தந்தி 14 Sep 2017 5:41 AM GMT (Updated: 14 Sep 2017 5:40 AM GMT)

மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிங்யா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் தீ வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இதுவரையில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி உள்ளனர்.பவுத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஹிஞ்சா இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லீம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மியான்மரில் நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உடனடி அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, ரோஹிங்யா பிரச்சனையை கையாளும்விதம் தொடர்பாக  மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கி மீது எழுந்துள்ள விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், அடுத்த வாரத்தில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை குறித்து கருத்து தெரிவிக்காத காரணத்தால் ஆங் சான் சூ கி மீது மேற்குலகில் உள்ள அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூ கி பங்கேற்பதாக இருந்தார்.

மியான்மர் ரோஹிங்யாக்களுக்கு  தேவைப்படும் உதவிகளை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரோஹிங்யா  கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

அன்டோனியோ கட்டெரஸ்  கூறியதாவது:-

''மியான்மரில் மனிதாபிமான நிலை பேரழிவு நிலையில் உள்ளது'' .'மூன்றில் ஒரு பங்கு ரோஹிஞ்சாக்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதை விட வேறு வார்த்தைகளால் இதனை விவரிக்க முடியுமா?.

முன்னதாக, பாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, "இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.

ரகைன் மாகாணத்தில் "மோசமான ராணுவ நடவடிக்கையை" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

Next Story