முக்கிய தொலைக்காட்சியின் உரிமம் கேன்சல் அமெரிக்க அதிபர் மிரட்டல்


முக்கிய தொலைக்காட்சியின் உரிமம் கேன்சல் அமெரிக்க அதிபர் மிரட்டல்
x
தினத்தந்தி 12 Oct 2017 9:07 AM GMT (Updated: 12 Oct 2017 9:07 AM GMT)

அமெரிக்க முக்கிய தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்கா வசமுள்ள அணு ஆயுதங்களின் அளவை பத்து மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்  விரும்புவதாக  என்.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து அதன் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அதில்

அந்தச் செய்தியை "பொய்ச் செய்தி", "முழுக் கற்பனை" என்று வருணித்தார் டிரம்ப். "என்.பி.சி. மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து எல்லாம் பொய்ச் செய்தியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களது உரிமத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதற்கு எது உகந்த நேரம்? நாட்டுக்கு கெடுதி," என்று புதன்கிழமை தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.



இதே தொலைக்காட்சிதான், டிரம்ப் ஒரு மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீயத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஏற்கெனவே வெள்ளை மாளிகையின் கோபத்துக்கு இந்த தொலைக்காட்சி ஆளாகி  இருந்தது.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ புதன்கிழமை அமெரிக்கா வந்திருந்தார். அவரை வரவேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் பேசியபோதும் என்.பி.சி.யின் செய்தியை அவர் மறுத்தார்.

 இப்போது இருப்பது போல பத்து மடங்கு வேண்டும் என நான் விரும்புவதாக அவர்கள் தெரிவித்திருப்பது முழுக்க தேவையற்றது, என்னை நம்புங்கள்" என்று தெரிவித்தார் டிரம்ப்.

 பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேட்டிசும் என்.பி.சி. செய்தியை மறுத்தார்.

அதே நேரம், தொலைக்காட்சிகளின் உரிமம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட கருத்து, பேச்சுரிமை தொடர்பான பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவிடம் 7,100 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 7,300 அணு ஆயுதங்களும் இருப்பதாக அமெரிக்காவின் பக்கச்சார்பற்ற ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story