குழந்தைப்பேறு அருளும் ஆதி திருவரங்கம்


குழந்தைப்பேறு அருளும் ஆதி திருவரங்கம்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:30 AM GMT (Updated: 16 Jan 2017 2:48 PM GMT)

பிரம்மனுக்கு உபதேசம் தந்து, வேதங்களை மீட்டுத் தந்த தலம், சந்திரன் தன் தொழில் வலிமையை திரும்பப் பெற்ற கோவில், ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு

பிரம்மனுக்கு உபதேசம் தந்து, வேதங்களை மீட்டுத் தந்த தலம், சந்திரன் தன் தொழில் வலிமையை திரும்பப் பெற்ற கோவில், ஸ்ரீரங்கத்திற்கும் முந்தைய ஆலயம், சயனக் கோலத்தில் முதன்மை பெற்ற திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள திருவரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.

தல வரலாறு

அசுர குலத்தில் தோன்றிய சோமுகன் என்ற அசுரன், கடுமையான தவங்களை மேற்கொண்டு பல்வேறு வரங்களை பெற்றான். அதனால் தோன்றிய ஆணவத்தால் பூவுலகையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பினான். முனிவர்களும் தேவர்களும், தனக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டான்.

அதன்படியே பூலோகத்தையும், தேவலோகத்தையும் தன் வசப்படுத்தி, மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான்.  படைக்கும் தெய்வமான பிரம்மனையும் சிறைபிடித்து, அவரிடம் இருந்த வேதங்களைப் பறித்துக்கொண்டான்.

இதையடுத்து தேவர்கள், முனிவர்கள் அனைவரும் திருமாலை சரணடைந்தனர். அவர் அசுரனுடன் போரிட்டார். போரில் தோல்வியை தழுவும் நிலைக்குச் சென்ற அசுரன், திருமாலுக்கு பயந்து, கடலுக்குள் புகுந்து பதுங்கினான். இதனால் திருமால் மச்ச அவதாரம் எடுத்து, சோமுக அசுரனை வதம் செய்து கொன்றார். பின்னர் வேதங்கள் அனைத்தையும் மீட்டார்.

பூமிக்கு மேலே வெளிப்பட்ட திருமால், பிரம்மனிடம் வேதங்களை ஒப்படைத்து உபதேசமும் அருளினார். அந்த இடத்தில் இருந்த அழகிய சோலையும், வற்றாத நதியும் திருமாலின் மனதை லயிக்கச் செய்தது. அங்கேயே தங்க திருமால் விருப்பம் கொண்டார். ஆனால், திருப்பாற்கடலுக்குத் திரும்ப வேண்டும் என பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் வேண்டினர். முனிவர்களும், மற்றவர்களும் இதே இடத்தில் இருக்க வலியுறுத்தினர். உடனே திருமால் தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்து, தம்மைப்போன்ற உருவத்தினை பள்ளிகொண்ட கோலத்தில் உருவாக்கிட பணித்தார். அதன்பின் தேவர்களும், முனிவர்களும் ஒன்று சேர்ந்து பிரம்மோற்சவத்தை நடத்தினர் என்கிறது தல புராணம்.

ஆலய அமைப்பு

இந்தக் கோவில் கிழக்கு முகமாக காட்சியளிக்கிறது. ராஜகோபுரம் இல்லாத எளிய நுழைவு வாசல் இங்கு இருக்கிறது. மூன்று பிரகாரங்களோடு அமைந்திருக்கிறது ஆலயம். மூன்றாவது பிரகாரத்தின் ஈசான்ய பகுதியில் மிகப்பெரிய நெற்களஞ்சியம் இருக்கிறது. அதற்கு நேரில் வடமேற்கு மூலையில், சீதை, லட்சுமணரோடு, கோதண்டராமர் எளிமையாகக் காட்சி தருகிறார்.

இரண்டாவது நுழைவு வாசல் எதிரே, பலிபீடம், செப்புத் தகடு போர்த்திய கொடிமரம் அமைந்துள்ளன. இந்தப் பிரகாரத்தின் தென்கிழக்கே, வரதராஜப் பெருமாள் சன்னிதியும், மடப்பள்ளியும், அருகே வற்றாத கிணறும் உள்ளன. பிரகார மண்டபத்தில் தென்கிழக்கே துர்க்கை, வடக்கே சக்கரத்தாழ்வார் அமைந்துள்ளனர்.

மூலவர் ரங்கநாத சுவாமி

கருவறைக்கு வெளியே துவாரபாலகர்களாக மணியன், மணிகர்ணன் காவல் நிற்க, கருவறைக்குள்ளே பார்த்தால் நாம் திருப்பாற்கடலுக்குள் சென்ற நினைவு வந்து விடுகிறது. கருவறைக்குள் நீர்த்தேங்கும் அமைப்பு இருப்பதால் இந்த எண்ணம் நமக்கு எளிதாக வந்து விடுகிறது. கருவறைக்குள் ஆதிசே‌ஷ சயனத்தில் ரங்கநாதர், பள்ளிகொண்ட திருக்கோலம் மிகப் பிரமாண்டமாய் காட்சி தருகிறது. இவர் ஸ்ரீரங்கம்  ரங்கநாதரை விட பெரிய வடிவிலானவர். அவருக்கு முந்தையவர் என்பதால், இத்தலம் ஆதி திருவரங்கம் எனப் பெயர் பெற்றது.

தெற்கே தலை வைத்து, கிழக்கு முகமாய் புன்னகை பூத்து, வலது கையைத் தலையணையாய் வைத்து, இடது கையால் தன் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரம்மனுக்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் உபதேசம் செய்யும் கோலம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. ஸ்ரீதேவி  மடி மீது சயனித்திருக்க, வடக்கே நீட்டியுள்ள ஒரு திருவடியை பூதேவி தன் மடிமீது வைத்துள்ளாள். மற்றொரு திருவடி ஆதிசே‌ஷனின் வால் நுனி வளைவு சயனத்தில் வைத்தபடி ரங்கநாதர் காட்சி தருகிறார். வலது கையை தாங்கி மண்டியிட்ட பெரிய திருவடியான  கருடாழ்வார் தன் பணிக்காக காத்திருக்கிறார். மூலவரான ரங்கநாதருக்கு தைலக் காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்திக்கு நாள்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடக் கிறது.

ஜெயஸ்ரீ, விஜயஸ்ரீ துவாரக பாலகிகள் காவல் நிற்க, கருணை வடிவிலான ரங்க நாயகித் தாயார் அமர்ந்த கோலத்தில் அபய, வரத முத்திரையோடு அருளாசி வழங்குகிறார். அன்னையை வழிபடுவோர் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஆண்டாள்  சன்னிதி இரண்டாவது வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கே அமைந்துள்ளது. அனுமன் சன்னிதி, ஆலயத்தின் வெளியே எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது.

விழாக்கள்

சித்திரையில் பத்துநாட்கள் வசந்த உற்சவம், வைகாசியில் உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ரங்கநாதருக்கு தைலக்காப்பு, ஆடிப்பெருக்கு, ஆவணியில் கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் தீபம்,  சொக்கப்பனை கொளுத்துதல்  மற்றும் பகல்பத்து, இராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், மாசி மகம், பங்குனியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் என அனைத்தும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

மாசி மகத்தன்று 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மையனூர் என்ற கிராமம் சென்று, அவ்வூரில் உள்ள மலையில், ரங்கநாதர் அமர்ந்து காட்சி தருவார். அந்த மலையில் உள்ள சுனையை, கருடாழ்வார் தன் மூக்கினால் கீறி விட்டதால், அது கெடிலம் நதி என்று ஓடுவதாக வரலாறு கூறுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் திருவரங்கம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து தென்மேற்கே 225 கிலோமீட்டர் தூரத்திலும், திருக்கோயிலூரில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து தெற்கே மணலூர்ப்பேட்டை வழியாக 30 கிலோமீட்டர் தூரத்திலும், சங்கராபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மற்றும் திருக்கோயிலூரில் இருந்து மணலூர்ப்பேட்டை வந்து அங்கிருந்து மினி பஸ், ஆட்டோ மூலம் திருவரங்கம் வரலாம்.

–பனையபுரம் அதியமான்.


வழிபட்டு பேறுபெற்றவர்கள்

சந்திரன் தன் பத்தினியின் சாபத்தால் ஒளி மங்கி பொலிவிழந்தான். பின்னர்நாரதரின் ஆலோசனைப்படி, உத்திரங்கம் எனும் இந்த திருத்தலத்தில் வாழும் ரங்க நாதரை, நாள்தோறும் புஷ்கரணியில் நீராடி வணங்கினான். இதையடுத்து அவன் மீண்டும் தன்னுடைய ஒளியைப் பெற்றான். சந்திரன் நீராடிய புஷ்கரணியே, சந்திர புஷ்கரணி என்றும், தென் பெண்ணையாறு என்றும் வழங்கப்படுகிறது.

கிருதாயுகத்தில் சுருதகீர்த்தி என்ற மன்னன் வாழ்ந்தான். அவனுக்கு குழந்தைப்பேறு இல்லாததால் மிகவும் வருந்தினான். வழிபாடு நடத்தியும், யாகங்கள் செய்தும் பலன் இல்லை. பின்னர் இந்த ஆலயத்தில் உள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, அபிஷேக நீர் கொண்டு சென்று சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். இதையடுத்து அவனுக்கு புத்திரப் பேறு கிடைத்தது.

Next Story