கார்கோடகனுக்கு முக்தி அருளிய கயிலாயநாதர்


கார்கோடகனுக்கு முக்தி அருளிய  கயிலாயநாதர்
x
தினத்தந்தி 17 Feb 2017 12:15 AM GMT (Updated: 16 Feb 2017 11:33 AM GMT)

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில், தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டும்.

வ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் காலங்களில், தனக்கு நன்மைகள் மட்டுமே நடைபெற வேண்டும் என்று விரும்பினால், அவசியம் செல்ல வேண்டிய திருத்தலம் கோடக நல்லூர். நெல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி – முக்கூடல் செல்லும் ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து, தெற்கே ஒரு கிலோமீட்டர் சென்றால் கோடகநல்லூர் கிராமத்தை அடையலாம். இந்த ஊர் பழங்காலத்தில் ‘கார்கோடக ஷேத்திரம்’ என்றும், ‘கோடகனூர்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் இவ்வூரை தட்சிண சிருங்கேரி என்று புகழ்ந்துரைக்கிறார். இங்கு பாயும் தாமிரபரணி நதிக்கு தட்சிண கங்கை என்ற பெயரும் உண்டு. மனோன்மணியத்தில் கூறப்படும் சுந்தர முனிவர் என்பது இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும்.

இந்த ஊரின் மேற்கில் உள்ள பெரியபிரான் திருக்கோவில் கல்வெட்டுகளில் ‘கோடனூர்’ என்ற ‘குலசேகர சதுர்வேதிமங்கலம்’ என்று இவ்வூரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தல வரலாறு

பல ஆண்டுகளுக்கு முன்பு முனிவர் ஒருவர் காட்டில் தவம் புரிந்து கொண்டு இருந்தார். முனிவர் யாகம் செய்வதற்கு தேவையான சமித்து (சுள்ளி) பொறுக்குவதற்காக, முனிவரின் மகன் சென்றிருந்தான். அப்போது காட்டிற்கு வேட்டையாட வந்த பரி‌ஷத் மகாராஜாவின் மகன், முனிவர் அமர்ந்து இருந்து தியானம் செய்யும் இடத்திற்கு வந்தான்.

நீண்ட நேர வேட்டையாடலால் தாகம் ஏற்பட்டிருந்த ராஜ குமாரன், தண்ணீர் கேட்பதற்காக முனிவரை அழைத்தான். ஆனால் ஆழ்ந்த தியானத்தில் இருந்த முனிவருக்கு அது காதில் விழவில்லை. தன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்க்காமல் இருக்கும் முனிவரின் மீது, ராஜகுமாரனுக்கு கோபம் ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில், முனிவரின் அருகே கிடந்த இறந்த பாம்பை எடுத்து முனிவரது கழுத்தில் போட்டு விட்டு, குதிரையில் ஏறி வந்த வழியே சென்று விட்டான். முனிவர் ஆழ் தியானத்தில் இருந்ததால், தனது கழுத்தில் இறந்த பாம்பு இருப்பதைக்கூட அவர் அறியவில்லை.

அப்போது முனிவரின் மகன், தனது தந்தைக்கு யாகம் செய்வதற்கான பொருட்களை சேகரித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். தனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பு கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டான். தன்னுடைய யோகத் திறமையைக் கொண்டு, அங்கு நடந்தது என்ன என்பதை, முனிவரின் மகன் அறிந்துகொண்டான். இதையடுத்து அவனது கோபம், தன் தந்தையும், குருவுமானவரை அவமானப்படுத்திய ராஜகுமாரனின் மீது திரும்பியது.

‘எனது தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் போட்டவனின், தந்தையை பாம்பு தீண்டட்டும்’ என்று சாபமிட்டான். இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து பரி‌ஷத் மகாராஜாவின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள், அவருக்கு சர்ப்ப தோ‌ஷம் இருப்பதாக மகாராஜாவிடம் தெரிவித்தனர்.

அதனைக்கேட்ட பரி‌ஷத் மகாராஜா, தனது உயிரை சர்ப்பத்திடம்(பாம்பு) இருந்து காத்துக்கொள்ள, ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி கப்பலில் மண்டபம் கட்டி வசிக்கத் தொடங்கினார். அப்போது கார்கோடகன் என்ற பாம்பானது மகாராஜா சாப்பிடும் பழத்திற்குள் புழுவாக உருமாறி புகுந்து, பரி‌ஷத் மகாராஜாவை தீண்டியது. இதில் மகாராஜா இறந்து போனார்.

பின்னர் ஒருநாள் கார்கோடகன் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக்கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டார்.

தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்த மாக கார்கோடகன் பாம்பு, நளமகா ராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நளமகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நளமகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நளமகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நளமகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நளமகாராஜாவின் மாமா வீமராஜா, தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார்.

அந்த சமயத்தில், தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நளமகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார். நளன், வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் (நளனை) தனது கணவன் என்று தெரிந்து கொண்டாள்.

பின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பா‌ஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனுக்கும், தமயந்திக்கும் திருமணம் செய்து வைத்தார். நளன், ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.

பரி‌ஷத் மகாராஜாவையும், நளனையும் தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மகாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோட கனின் முன் மகாவிஷ்ணு தோன்றி, ‘கோடகநல்லூருக்கு சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினார்.

அதன்படி கார்கோடகன் பாம்பு கோடகநல்லூருக்கு வந்து அங்குள்ள ஈசனை வழிபட்டு தவம் செய்தது. இதையடுத்து கார்கோடகனுக்கு முக்தி கிடைத்தது. அன்று முதல் இந்த ஊர் கார்கோடகநல்லூர் என்றும், கார்கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது. தற்போது கார்கோடகநல்லூர் என்ற பெயர் திரிந்து கோடகநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

ஆலய அமைப்பு

இங்குள்ள கயிலாயநாதர் ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இத்தலம் நவ கயிலாயத்தில் மூன்றாவது இடத்தையும், நவக்கிரகங்களில் செவ்வாய் ஆட்சி செலுத்தும் ஆலயங்களில் ஐந்தாவது இடத்தையும் பெறுகிறது. இங்குள்ள இறைவன், செவ்வாய் பகவான் வடிவில் அருள்பாலிக்கிறார். வடக்கு முகமாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் உள்ள நந்தியம்பெருமானுக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

இங்குள்ள கோவிலில் சுவாமி கயிலாசநாதராகவும், அம்பாள் சிவகாமி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனர். கயிலாச நாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமி அம்மன் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். இந்தக் கோவிலில் கொடிமரம், கோபுரம் ஆகியவை இல்லை. கோவிலின் உள்புறத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகன், அம்பாள், சிறிய நந்தி, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.  

இந்தக் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடக் கிறது. சிவராத்திரி, திருவாதிரை போன்ற திருவிழாக்கள் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

– நெல்லை வேலவன்.

Next Story