வெற்றி தரும் பிரார்த்தனைகள்


வெற்றி தரும் பிரார்த்தனைகள்
x
தினத்தந்தி 17 March 2017 12:15 AM GMT (Updated: 16 March 2017 12:28 PM GMT)

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!

பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!

கர்த்தர் உணர்த்திய வார்த்தைகளை தேவசெய்தியாக உங்களுக்கு எழுதுகிறேன். வாசித்து கர்த்தருக்குள் விசுவாசத்தோடு ஏற்றுக் கொண்டு ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

போராட்டங்களில்...

‘‘கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும், உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும். உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். மனு‌ஷன் உம்மை மேற்கொள்ள    விடாதேயும் என்றான்’’. (2.நாளா.14:11)

இக்காலங்கள் மிகவும் கொடியதும், நாட்கள் பொல்லாதவைகளுமாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எல்லா பக்கங்களிலும் சொல்ல முடியாத போராட்டங்களோடு மக்கள் வாழ்ந்து வருவதுதான் இந்நாட்களின் நிலைமையாகும்.

இச்சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? மனு‌ஷனை நம்புவதை கர்த்தர் ஒருநாளும் விரும்புகிறவரல்ல.

ஆசா என்ற ராஜாவுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா என்பவன் பெரிய மாபெரும் சேனையோடு யுத்தம் பண்ண எதிரிட்டு வந்தபோது ராஜாவாகிய ஆசா செய்த முதல் காரியம் ‘ஜெபம்’ ஆகும்.

இரண்டாவதாக, தன் ஜெபத்தில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை வாசித்துப் பார்க்கும்போது தன்னுடைய பெலத்தை நம்பாமல் கர்த்தருடைய பெலனை முற்றிலும் சார்ந்து கொள்கிறவன் என்பதைக் காண முடியும்.

இதுதான் கர்த்தருடைய பிள்ளைக்கும், உலகப் பிரகாரமானவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். ஆம், உங்கள் வாழ்விலும் ஏதாகிலும் போராட்டத்தின் வழியாக கடந்து வந்துக் கொண்டிருக்கிற இந்நாட்களில் ஆசா ராஜா ஒரு முன்மாதிரியாகும்.

சிலர் கர்த்தருடைய பெலனையும் அவர்   களுடைய சுயபெலனையும் வைத்துக் கொண்டு போராடுவார்கள். அது முற்றிலும் தோல்வியில் தான் முடிகிறது.

இயேசு சொல்கிறார், ‘இவ்வுலகில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு. ஆனாலும் போராட்டங்களை மேற்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன? தேவனை நோக்கி பிரார்த்தனை செய்து முற்றிலுமாய் அவரை சார்ந்து கொள்ளுங்கள்’.

‘கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனு‌ஷன் எனக்கு என்ன செய்வான்’ (எபி :13:6)

மேலும், ‘எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்’ (சங் : 121:1,2) என்று வாய்களைத் திறந்து அறிக்கை செய்து கர்த்தரைத் துதியுங்கள். உங்கள் போராட்டங்களிலிருந்து மாபெரும் வெற்றியைக் காண்பது நிச்சயம்.

வியாதிகளில்...

‘‘கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான். நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, உன் நாட்களோடு பதினைந்து வரு‌ஷம் கூட்டுவேன்’’ (ஏசா:38:3,5).

எனக்கன்பானவர்களே! போராட்ட நேரங்களில் மட்டுமல்ல பெலவீனங்கள் மற்றும் வியாதிகளிலும் ஜீவனுள்ள தெய்வமாகிய ஆண்டவராகிய இயேசுவை அண்டிக்கொள்கிறவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள்.

உதாரணமாக, வியாதியின் படுக்கையில் ராஜாவாகிய எசேக்கியாவின் விண்ணப்பத்தையும் அதற்கு கர்த்தர் அளிக்கும் பதிலையும் ஏசா: 38:3,5 வசனங்களில் காண்கிறோம் அல்லவா.

 உங்கள் வியாதிகளைவிட இயேசு பெரியவர் என்பதை மறந்து போகாதீர்கள். உலகப்பிரகாரமான மருத்துவருடைய ஆலோசனைக்கு கட்டாயமாக நீங்கள் செவி கொடுக்க வேண்டும். அதே வேளையில் பூரண சுகத்தைக் கொடுப்பது தேவனுடைய கரத்தில் அல்லவா இருக்கிறது.

வேதம் கூறுகிறது, ‘‘விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்’’ (யாக்.5:15). மேலும் நம் அருமை ஆண்டவர் ‘என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்’ என்று யோவான்: 14:14–ல் வாக்கு அருளியுள்ளார் அல்லவா?

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் ‘சகல வியாதியஸ்தர்களையும் குணமாக்கினார்’ (மத்:4:24).

அதுமட்டுமல்ல, ‘அவரைத்தொட்ட யாவரும் சுகமானார்கள்’ என மாற்கு 6:56 கூறு கிறது எத்தனை உண்மை.

ஆகவே உங்கள் வியாதிகள் எத்தனை கொடியதாக இருந்தாலும் அது நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அற்ப காரியம். அவரையே அண்டிக் கொள்ளுங்கள். பூரண சுகத்தை நிச்சயம் உங்களுக்கு அருளுவார். நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை–71.

Next Story