புத்திரபாக்கியம் அருளும் தீர்த்தவாரி


புத்திரபாக்கியம் அருளும் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 22 March 2017 10:06 AM GMT (Updated: 22 March 2017 10:06 AM GMT)

திருவாலங்காடு திருத்தலம், இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ஆகும்.

‘கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணியிலாத உடலும், சலியாத மனமும், அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும்’ என்று திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் அபிராமிபட்டர் ஏராளமான நற்பேறுகளை வேண்டுகிறார். அதில் அவர் ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கூறுவதில் இருந்தே புத்திரபாக்கியம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 அதாவது மற்ற பேறுகள் எல்லாம் தவறினாலும், புத்திர பாக்கியம் எனும் சந்தான பாக்கியம் தவறாமல் கிடைக்க அருள வேண்டுகிறார் அபிராமிபட்டர். திருமணத்துக்குப் பிறகு மூன்று மாதத்தில் இருந்தே புதுமண தம்பதியரிடம் ஊராரும், உறவினர்களும் கேட்கும் ஒரே கேள்வி ‘விசே‌ஷம் ஏதாவது உண்டா?’ என்பதுதான். இங்கு விசே‌ஷம் என்பது புத்திர பாக்கியம். தற்போதைய உணவு பழக்க முறையாலும், கர்ம வினைகளாலும் சிலருக்கு புத்திர பாக்கியம் தள்ளிப்போகலாம். ஆண்களின்  உயிரணுக்களில் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெரும்பாலும் மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருக்கின்றது. அதுபோல மாதவிலக்கில் தடைகள், கருமுட்டை உருவாகுவதில் உள்ள தடைகள், கரு குழாயில் ஏற்படுகின்ற அடைப்புகள் முதலான பிரச்சினைகள் பெண்களின் மலட்டுத்தன்மைக்கான காரணங்களாக இருக்கின்றது.

ஆனால் ஒரு தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது அந்த ஆலயத்தின் தல புராணம். ஆம்! அந்த ஆலயமே ‘திருவாலங்காடு வண்டார் குழலம்மை சமேத வடாரண்யேஸ்வரர் திருக்கோவில். திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள ஈசனின் ஊர்த்தவ நாட்டியம் நடந்ததும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை – கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் ஒன்றுதான்; வடபத்திரகாளி அம்மன்.

நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ஆகும். இங்கு நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்துதான், அதிதீ புத்திரபாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரன் இத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, தன் மகன் ஜெயந்தனை பெற்றானாம்.

பரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். இதனால் அவன் மனம் வெதும்பி திருத்துருத்தி அமிர்த முகிழாம்பிகை சமேத சொன்னவாறு அறிவார் திருக்கோவிலில் ஈசனை வழிபட்டு வந்தான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் அசரீரியாக ‘பரதா! நீ அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடி, அத்தலத்து வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபட்டு வா. கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில் அத்தல புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை அங்கு வழிபட, மலடியும் குழந்தை பெறுவாள்’ என்று அருளினார்.

பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காக காத்திருந்து, திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.

இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என அம்மன்கள் உள்ளனர். இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை சிறிது சேதமானதால், புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?’ என கேட்க, உடனே பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.

இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.

பழைய வண்டார்குழலி அம்மன் அருகில், தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டுவர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவேரி அம்மன், வள்ளி –தெய்வானை சமேத முருகர் சன்னிதிகளும் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.

–சிவ.அ.விஜய் பெரியசுவாமி, கல்பாக்கம்.

Next Story