இயேசுவின் விண்ணேற்ற காட்சிகள்!


இயேசுவின் விண்ணேற்ற காட்சிகள்!
x
தினத்தந்தி 28 April 2017 12:15 AM GMT (Updated: 27 April 2017 12:30 PM GMT)

இயேசு இறந்ததற்கு பின்னர், அவரது சீடர்கள் தனியறையில் அடைபட்டுக் கிடந்தார்கள். எப்போது தலைவர்கள் வருவார்களோ, எப்போது தங்களைக் கொல்வார்களோ என்னும் பயம் அவர்களைப்பிடித்து ஆட்டியது.

யேசு இறந்ததற்கு பின்னர், அவரது சீடர்கள் தனியறையில் அடைபட்டுக் கிடந்தார்கள். எப்போது தலைவர்கள் வருவார்களோ, எப்போது தங்களைக் கொல்வார்களோ என்னும் பயம் அவர்களைப்பிடித்து ஆட்டியது.

பூட்டிய கதவுகள் பூட்டியபடி இருக்க, இயேசு அவர்கள் மத்தியில் வந்து நின்று ‘உங்களுக்குச் சமாதானம்’ என்றார்.

சீடர்கள் அதிர்ந்தார்கள். ஏதோ பேயைக் கண்டது போல திகிலுற்றார்கள்.

‘பயப்படாதீர்கள்.. நான் தான்! ஆவியல்ல. என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காணும் இந்த எலும்பும், சதையும் ஆவிகளுக்குக் கிடையாது’ என்றார் இயேசு.

சீடர்கள் ஆனந்தமானார்கள். இயேசு தன்னுடைய கைகளையும், கால்களையும் சீடர்களிடம் காண்பித்தார். பின் புன்னகையுடன் ‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக’ என்று மீண்டும் வாழ்த்தினார். அப்போது தோமையார் அவர்களுடன் இல்லை. மற்ற சீடர்கள் அனைவரும் அங்கே இருந்தார்கள்.

‘உண்பதற்கு ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா?’ என இயேசு கேட்டார்.

சீடர்களோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து அகலாமல் இருந்தார்கள். ஒருவர் ஓடிச்சென்று வேக வைத்த மீன் துண்டு ஒன்றை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். அதை இயேசு தன் கையில் எடுத்து, சீடர்களுக்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டார்.

‘மோசேயின் சட்ட நூல்களிலும், இறைவாக்கினர் நூல்களிலும், திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேறுவதற்காகத் தான் இவையெல்லாம் நிகழ்ந்தன’.

இயேசு தன்னுடைய சீடர்களிடம் சொல்ல, அவர்கள் இன்னும் பயம் விலகாதவர்களாக இயேசுவைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்க்கவேண்டும் என்றும், பாவமன்னிப்பு பெற மனம் மாறுங்கள் என்றும், எருசலேம் முதல் அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறை சாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இதற்கு நீங்கள் சாட்சிகள்’ என இயேசு சொன்னார்.

பின் அவர்கள் மேல் ஊதி, ‘தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவனுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவனுக்கு அவை மன்னிக்கப்படும். எவனுடைய பாவங்களை மன்னிக்காமல் விடுவீர்களோ, அப்பாவங்கள் மன்னிக்கப்படாது’ என்றார்.

சீடர்கள் பரவசமானார்கள். இயேசு இல்லாமல் என்ன செய்வது? என்று திகைத்துக் கொண்டிருந்த சீடர்களுக்கு, தங்களுடைய பணி முடிவடையவில்லை. இனிமேல் தான் தொடங்கப்போகிறது என்பது புரிந்தது. அவர்கள் உற்சாகமானார்கள். அதன்பின் இயேசு மறைந்தார். கொஞ்ச நேரத்தில் தோமா வந்தார்.

சீடர்கள் அனைவரும் உற்சாகத்துடன் அவரிடம் நடந்தவற்றைக் கூறினார்கள். தோமா ஏற்கனவே சந்தேக புத்திக்காரர். ஆனால் எதையும் உண்மையென்று  அறிந்து விட்டால் பின் அதை ஆழமாய் பின்பற்றுபவர். அவர் சீடர்கள் சொன்னதை முதலில் நம்பவில்லை. ‘நீங்கள் இயேசுவை பற்றிய நினைவிலேயே இருப்பதால் உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. நான் இதை நம்பமாட்டேன்’ என தோமா சொன்னார்.

‘உண்மையாகவே நடந்தது தான். எல்லோரும் ஒரே நேரத்தில் இயேசுவைக் கண்டோம்’ என்று சீடர்கள் சொல்ல, ‘நீங்கள் என்ன சொன்னாலும், நான் அவருடைய கைகளில் ஆணிக் காயங்கள் இருக்குமே அதில் என்னுடைய விரலையும், விலாவின் காயத்தில் என்னுடைய கைகளையும் விட்டுப் பார்க்காமல் நம்பமாட்டேன்’ என்றார். தோமாவின் பேச்சை கேட்டு சீடர்கள் வருந்தினார்கள்.

எட்டு நாட்கள் கடந்தன.

இயேசு மீண்டும் தன் சீடர்களுக்கு முன்பாகத் தோன்றினார். இப்போது தோமையாரும் உடனிருந்தார்.

‘தோமாவே! இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு. இதோ என் விலா. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தீர்த்து நம்பிக்கை கொள்’ என இயேசு சொல்ல, தோமா ‘என் இயேசுவே உம்மை நம்புகிறேன்’ என்று கத்தினார்.

‘நீ என்னைக் கண்டதால் நம்புகிறாய். காணாமலேயே நம்புபவன் பேறு பெற்றவன்’ இயேசு சொல்ல, தோமா அமைதியானார். அதன்பின் ஏராளமான சீடர்களுக்கு இயேசு காட்சியளித்தார். உயிர்த்த பின் சுமார் ஐநூறு பேருக்கு இயேசு காட்சியளித்ததாக இறையியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பின்பு தன் சீடர்களுடன் பெத்தானியாவில் வந்த இயேசு அவர்களை ஆசீர்வதித்தார்.

‘விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் உலகமெங்கும் நற்செய்தியை அறிவியுங்கள். செயல்களினால் என்னை மக்களுக்குப் போதியுங்கள். மக்களுக்கு தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்’ என்றார்.

சீடர்கள் இயேசுவின் போதனைகளை சற்றும் சிதற விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு தொடர்ந்தார். ‘நம்பிக்கையுடன் திருமுழுக்கு பெறுவோர், மீட்புப் பெறுவர். நம்பிக்கையற்றவர்களோ தண்டனைத் தீர்ப்பு பெறுவர். நம்பிக்கை கொண்டோர் அருள் அடையாளங்கள் புரிவர். அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவார்கள், புதிய மொழிகளைப் பேசுவார்கள், பாம்புகளைத் தம் கையால் பிடிக்கும் தைரியம் கொண்டிருப்பார்கள். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அவர்களை அது ஒன்றும் செய்யாது. அவர்கள் கை வைத்தால் நோயாளிகள் சுகம் பெறுவார்கள்’ என ஆசீர்வாத மொழிகளை அடுக்கினார்.

சீடர்கள் அனைவருடனும் இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். சீடர்களுக்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கிய இயேசு அவர்களைப் பார்த்து புன்னகைத்தார். பின் தன்னுடைய கைகளை விரித்து அவர்களை ஆசீர்வதித்து, ‘இதோ.. உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருக்கிறேன்’ என்றார்.

சீடர்கள் மனதில் அந்த வார்த்தை மிகப்பெரிய தன்னம்பிக்கையை வளர்த்தது. பின் இயேசு அவர்கள் முன்னிலையிலே விண்ணேற்றம் அடைந்து தன் தந்தையிடம் சென்றார்.

சீடர்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

–மிராண்டாஸ், சென்னை.

Next Story