ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
x
தினத்தந்தி 9 Jun 2017 10:15 PM GMT (Updated: 9 Jun 2017 8:06 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

ஸ்ரீரங்கம்,

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்து அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவ திருவிழாவின் 9-ம் நாளான நேற்று நம்பெருமாள் மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 7 மணியளவில் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் 7.45 மணிக்கு வசந்த மண்டபம் வந்து அங்கு 8.30 மணி முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு இரவு 12 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் வசந்த உற்சவம் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அதிகாரி ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story